இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

மனம் மகிழுங்கள்-5

E-mail அச்செடுக்க

நமது மனது எப்படி இருக்கிறதோ அப்படித்தான் அது உலகத்தை உணர்கிறது. மனது உலகத்தை எப்படி உணர்கிறதோ அப்படித்தான் உலகம் நம்மைப் பிரதிபலிக்கிறது.

குழப்புகிறதோ?

ரொம்ப சிம்பிள்.

நீங்கள் உற்சாகமாய், “குட் மூடில்“ இருக்கிறீர்கள் என்றால்  நீங்களும் மற்றவர்களிடம் அன்பாய், இனிமையாய், நகைச் சுவையாய்ப் பேசுவீர்கள்.. பதிலுக்கு அவர்களும் உங்களிடம் அப்படியே பிரதிபலிப்பர். நீங்கள் சிரித்து நண்பரின் முதுகைத் தட்டினால் அவர் கத்தி எடுத்துக் கொண்டு உங்களைக் குத்த வரப்போவதில்லை. பதிலுக்கு அவரும் சிரித்தாக வேண்டும். உலகமே அன்று உங்களுக்கு மகிழ்ச்சியாய், இனிதாய்த் தோன்றும்.

நீங்கள் உற்சாகம் குன்றி, வருத்தத்திலும் அழுது வடியும் முகத்துடனும் இருந்தால்? பொறுமைசாலியான நண்பராய் இருந்தால், ஒரு சிங்கிள் டீ வாங்கிக் கொடுத்து உங்கள் சோகக் கதையைக் கேட்டுவிட்டு எஸ்கேப் ஆகலாம். அல்லது, தூரத்திலிருந்தே உங்களைப் பார்த்துவிட்டு ஓடும் பஸ்ஸில் ஃபுட்போர்டில் தாவி ஏறி ஓடிவிடலாம். அதைக் கண்டால் மேலும் சோகம் பெருகி, மேலும் வருத்தப்பட்டு... கஷ்டம்.

நம்மைப் பற்றி நம் மனதிலுள்ள சுயபிம்பம் தான், நாம் எப்படி நடந்துகொள்ளப் போகிறோம் என்பதை நிர்ணயிக்கிறது. அதன் அடிப்படையில் தான் நாம் யாரிடம் பழகப் போகிறோம், என்ன செய்யப் போகிறோம், அல்லது செய்யாமல் இருக்கப் போகிறோம் என்பது நிர்ணயிக்கப்படுகிறது..

சரி, நம்மைப் பற்றிய பிம்பம் நமக்குள் எப்படி உருவாகிறது?

அது நமது அனுபவங்களின் கலவை. நாம் சந்தித்த வெற்றி, தோல்வி, நம்மைப் பற்றி நாம் நினைப்பது, மற்றவர்களைப் பற்றி நம் மனதில் ஏற்படும் அபிப்ராயம், மற்றவர்கள் நம்மிடம் நடந்து கொள்ளும் முறை, இவையெல்லாம் நம்முடைய   சுயபிம்பம் உருவாகும் காரணிகள். அதை மனம் நம்புகிறது. அந்த பிம்பத்தின் கட்டுமானததிற்குள்ளேயே நம்முடைய வாழ்க்கையை அது அமைத்துக் கொள்கிறது.

அந்த சுயபிம்பம்  தான், இந்த உலகத்தை நாம் எந்தளவு நேசிக்கப் போகிறோம், அதில் வாழ என்னென்ன முயற்சி எடுக்கப் போகிறோம் என்பதையும், நாம் வாழ்க்கையில் எதை சாதிக்கப் போகிறோம் என்பதையும் நிர்ணயிக்கிறது.

நாம் யார் என்று நினைக்கிறோமோ அது தான் நாம்!

அந்த சுயபிம்பம் நம்மை எப்படி வடிவமைகிறதோ அது தான் நாம்!

பள்ளியில், கல்லூரியில் ஏதாவது ஒரு பாடம் படு்த்தியெடுக்கும். ஒருவர் பௌதிகத்தில் வீக்காக இருப்பார். “என்னதான்  தலைகீழாக நின்றாலும் இது என் மண்டையில் ஏறாது” என்ற முடிவிற்கே வந்துவிடுவார்.  ஆரம்பத்தில் ஏதாவது ஒரு பெளதிக விதி சற்றுப் புரியாமல் ஆகி, அதைத் தொடர்ந்து அந்தத் தேர்வில் சற்றுக் குறைந்த மதிப்பெண் பெற்றிருக்கலாம். அதுவே பின்னர் அலர்ஜியாக உருப்பெற்று, ”ம்ஹும்! காப்பி அடிக்கலாமா? பிட்டு அடிக்கலாமா?” என்று குறுக்குவழிக்கு மனம் தயார்பட ஆரம்பித்திருக்கும்.

மனம் மேலும் மேலும் அந்தப் பாடத்தில் அவரைப் பின்தங்க வைக்கும். அப்படியே தப்பித் தவறிச் சற்று  நல்ல மதிப்பெண் கிடைத்துவிட்டாலும், ”ஹ! எல்லாம் குருட்டு அதிர்ஷ்டம்” என்று தான் மனம் நம்பும். அடுத்த தேர்வில் தோல்வி வந்தால், ”அதான் அப்பவே தெரியுமே!” என்றுதான்  மனம் நிம்மதி அடையும்.

பௌதிகம், உதாரணம் மட்டுமே! வாழ்க்கையில் ஒருவர் இப்படி ஏதாவது ஒரு விஷயத்தில் பின்னடைந்து இருக்கலாம், வீக்காக இருக்கலாம்.

சைக்களில் டபுள்ஸ் அடிக்கும் போது ஒருமுறை விழுந்திருப்பார். அதன் பிறகு தம்மால் டபுள்ஸ் அடிக்க முடியாது என்று முடிவெடுத்து அதையே நம்ப ஆரம்பிப்பார்.   தாம் மனதளவில் அதைப் பலமாய் நம்புவது மட்டுமில்லாது, பார்ப்பவரிடமெல்லாம் அதைப் பறை  சாற்றிககொள்ளவும் செய்வார்.. எதிர் வீட்டு மாமா, அடுத்த வீட்டு வேலைக்காரி, காலையில் பால் சப்ளை செய்பவர் என்று யாரிடமெல்லாம் சகஜமாய்ப் பேசுவாரோ அத்தனைப் பேரிடமும் அவரது பலவீனம் விளம்பரம் ஆகும். எவ்வளவுக்கு எவ்வளவு அவர் அப்படிச் சொல்லிக் கொள்கிறாரோ மற்றவர்களும் அந்த அளவுக்குஅதை நம்ப ஆரம்பித்து விடுகிறார்கள். அதைக் கொண்டு மனம் மேலும் தன்னை அப்படியே நம்ப, அவரது பலவீனமான சுயபிம்பம் வலுவடைந்து விடுகிறது.

இதை மாற்ற, நம்மைப் பற்றிய உயர்ந்த சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்

அதற்கு என்ன செய்யலாம்.

மாத்தியோசி!

நம்முடைய பாஸிட்டிவ் தன்மைகளை உணர்ந்து நம்மால் நம் குறைகளைக் களைந்து முன்னேற முடியும் என்ற தன்னம்பிக்கை முதல்படி. தம்முடைய சக்தியையும் வலிமையையும் உணர்ந்து கொள்ள ஆரம்பித்துவிட்டால், அதுவே ஒருவரை வேகமாய் முன்னேற வைக்கும்.

“என்னதான் ஸ்பின் போட்டால்லும் என்ன? துரத்துகிறேன் பார் அதைப் பவுண்டரிக்கு” என்று நினைத்தால் அதுதான் தன்னம்பிக்கை. அம்பயர் கையை வேகமாய் வலமும்  இடமும் ஆட்ட வேண்டியது தான்.

மாறாக “இந்த ஸ்பின்னெல்லாம் தாங்குவேனா” என்று நினைத்தால் அம்பயர் ஒற்றைக் கையின் ஒற்றை விரலை மேலே நீட்டி விடுவார்.

“வர வருமானத்திலே எப்படித் தான்  குப்பைக் கொட்டுவதோ” என்று நினைத்தால் மாசா மாசம் பற்றாக்குறை தான்.

“எப்படியும் சமாளிச்சுடலாம்” என்று நினைத்துப் பாருங்களேன். மாயம் நிகழும்.

இது இப்படியிருக்க,

தமது வாழ்க்கையில்  ஓரளவு தான்  நல்லது நடக்கும் என்று சிலரது மனம் தேவையில்லாமல் ஒரு வரைமுறை வைத்திருக்கும். அவரது வாழ்க்கையில் நல்லதே நடந்து கொண்டிருக்கிறது என்று வையுங்கள், ”அதெப்படி எல்லாமே இவ்ளோ சூப்பரா நமக்கு நடந்து கொண்டிருக்கிறது” என்று அவரது மனம் ஆச்சரியமும், இனந்தெரியா பதட்ட நிலையையும் அடைய, அடுத்து ஏதாவது ஒரு தீயது நிகழலாம்.

“அதானே  பார்த்தேன். அப்படி நமக்கு எல்லாமே ஒழுங்கா நடந்துட்டாலும்?” என்று அப்பொழுதுதான் மனம் சமாதானம் அடையும்.

மனதை இன்பமாக வைத்துக் கொள்ள வரைமுறை தேவையில்லை. நம்மை விட வாழ்க்கையில் உயர்ந்தவர்கள் எத்தனைக் கோடி உள்ளார்களோ அதே போல் நமக்கும் கீழே உள்ளவர் கோடி.

எனவே நமது சுயபிம்பத்தை சிறப்பானதாக ஆக்கிக்கொள்ள நமது வாழ்க்கையின் தரம், அமைதி, நோக்கம் இவற்றைத் தரமானதாக ஆக்கிக் கொள்ளவேண்டும்.

இங்கு ஒன்றை மிகக் கவனமாய் மனதில் கொள்ள வேண்டும். நம்மைப் பற்றிய உயர்வான சுயபிம்பம் என்பதற்கும்  கர்வம், அகந்தை தலைக்கணம் போன்ற சொற்களுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசத்தை உணர வேண்டும்.

இல்லையென்றால் என்னாகும்?

தரமான சுயபிம்பம் மனமகிழ்வுடன் நாம் வாழ்க்கையில் உயர வழிவகுக்கும்.

மற்றவை? சட்டசபை, நாடாளுமன்றம், என்று எங்காவது நம்மை அனுப்பி வைக்கலாம்.


னம் மகிழ, தொடருவோம்...


“சும்மா நாலு தும்மல் தும்மினாலும், என்ன தான் பயமோ ? உடனே டாக்டரிடம் ஓடுகிறார்கள். நான் சின்ன வயசில தடுப்பூசிக்காகப் போனதுடன் சரி; அப்புறம் இத்தனை வருஷமாச்சு --. டாக்டர் வீட்டு அட்ரஸ் கூடத் தெரியாது எனக்கு.”

கேட்டிருக்கிறீர்களா இதை? அல்லது எப்பொழுதாவது யாராவது எங்காவது பத்திரிகைப் பேட்டிகளில் இப்படிச் சொன்னதைப் படித்துள்ளீர்களா?

”இருந்தாலும் ரொம்ப ஓவர் அலட்டல் இது,” என்று அப்பொழுது உங்களுக்குத் தோன்றியிருக்கும். அவர்கள் மிகைப்படுத்திப் பேசுவதாகவும் எண்ணியிருந்திருப்பீர்கள். ஆனால், உண்மையில் சிலருக்கு அப்படி ஒரு பாக்கியம் அமைவதுண்டு.

எப்படி சாத்தியம்?

சாதிப்பது மனதுதானாம்!

அதாவது, அவரது மனதின் பாஸிட்டிவ் வடிவமைப்பாம். அது ஆக்க சிந்தனையுள்ள மனது. அதற்காக அவர்களை, சிக்கன் குன்யா, swine flu வைரஸ்களெல்லாம் வெறுத்து ஒதுக்கி ஓடும் என்பது அர்த்தமில்லை. யதேச்சையாய்த் தாக்கும் சில்லறை நோய்களிலிருந்து வலிமையான மனது நம்மைக் காக்கும் என்கிறார்கள்.

இது ஒன்று!

ஆச்சா?

அடுத்தது, சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருக்க நேரிடுவது.

அது என்னவாம்?

பிடித்த நடிகரின் படம் வெளியான முதல் நாள். தியேட்டர் ஹவுஸ் ஃபுல். லஞ்ச லாவண்யத்தைச் சகட்டு மேனிக்குத் திட்டி ”உருப்படுமா இந்த நாடு” என்று பொருமும் மகா அக்கறையுள்ள சிட்டிசன், கள்ள மார்க்கெட் டிக்கெட்டாவது கிடைக்காதா என்று பரபரப்பாய் அலைந்து கொண்டிருப்பார். அப்பொழுது தான் இவர் பக்கத்தில் அசால்ட்டாய் அவன் வந்து பைக்கை நிறுத்தி விட்டு இறங்க, வேகமாய் அவனை நெருங்குவார் இன்னொருவர். “ஸார் எக்ஸ்ட்ரா டிக்கெட் ஒன்று இருக்கிறது வேண்டுமா?”

இவர் காதில் அது விழுந்து, சுதாரிப்பதற்குள், படம் ஆரம்பிக்கப்போகும் அவசரத்தில் அந்த இருவரும் போயே போயிருப்பார்கள். சிலர், சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருக்க நேரிடுவதையும் ஆக்க சிந்தனையுள்ள மன வடிவமைப்பு என்கிறார்கள். பெரும்பாலும் அது அவர்கள் வாழ்க்கையில் அப்படி நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.

வேறு சிலர் உள்ளனர். தொட்டதெல்லாம் பொன்னாய்த் துலங்கும். மண்ணும் பொன்னாகும். பலர் அதிர்ஷ்டம் என்கிறார்கள். மனோவியலாளர்களோ, ”பிலீவ் மீ. அதுவும் பாஸிட்டிவ் வடிவமைப்பு” என்று அடித்துச் சொல்கிறார்கள்.

சில வருடங்களுக்குமுன் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பலர் திடீரென்று லட்சாதிபதி, கோடீஸ்வரன் என்றெல்லாம் ஆகிவிட்டார்கள். உபயம் ஐ.டி. என்றார்கள்; சாஃப்ட்வேர் என்றார்கள். இது பொதுவாய்ப் பலருக்கு ஒரே நேரத்தில் நிகழும் விதி. அது வேறு.

இந்தச் சிலர் யாரென்றால், ”மனுஷன் குடியிருப்பானா அந்தக் காட்டிலே” என்று நாம் நினைக்கும் ஓர் அத்துவானப் புறநகரில் என்னவோ நினைத்து மனை வாங்கியிருப்பர் ஞான திருஷ்டியெல்லாம் எதுவும் இருந்திருக்காது. ஆனால் சரியாக அந்தப் பகுதியில் வந்து சேரும் வெளிநாட்டுக் கார் கம்பெனி ஒன்று சில ஆயிரம் ரூபாய்களில் வாங்கப்பெற்ற மனைகளை இலட்சங்களில் விலைபேசி வாங்கி, மனைக்குச் சொந்தக்காரர்களை ஓவர் நைட்டில் லட்சாதிபதியாக்கிவிடும்.

அடுத்து, பெரிய நிர்வாக இயல் பட்டமோ அதில் நிபுணத்துவமோ இல்லாத சிலருக்கு, எளிமையான ஓர் இயல்பு இருக்கும். வெளுத்ததெல்லாம் பால் என்பது போல் எல்லோரையும் நம்புவார்கள். மனதில் விகல்பம் ஏதுமில்லாமல் பழகக் கூடியவர்களாய் இருப்பார்கள். எதைச் செய்தாலும் எளிதாய் எடுத்துக் கொண்டு, இனிமையாய்க் காரியமாற்றும் மன வடிவமைப்பு அவர்களுக்கு இருக்கும்.

எதிர்வினை?

அவர்களிடம் பாசம் கொண்ட, எப்பொழுதும் நல்லவிதமாய் அவர்களுடன் பழகும் நண்பர் கூட்டம் ஒன்று விரிவடையும். அவர்களுக்கு உதவ அந்த நட்பு வட்டம் எப்பொழுதுமே ஆர்வமாயிருக்கும். அந்த நட்பு வட்டத்திடம் தமக்கு வேண்டிய உதவிகளை கோரிப் பெறுவது இவர்களுக்கு எளிதாகவே இருக்கும்.

”வெரி நைஸ். கேட்க நல்லாயிருக்கு. இதைப்போல நல்ல ஆக்கபூர்வ வடிவமைப்புகள் என் மனதிலும் ஏற்பட வேண்டும். மாடல் ஆர்டர் செய்தால் எங்காவது கிடைக்குமா?” என்று நெகடிவ்வாளர்கள் யோசிக்கலாம். ”பிறக்கும் போதே கூடப் பிறந்த குணம் சார். அதெல்லாம் நீரைப் பீய்ச்சி அடித்தாலும் போகாது” என்று அவர்களில் வேறு சிலர் சலித்துக் கொள்ளலாம்.

“அப்படியெல்லாம் இல்லை. நாம் மாறினால் நம் வாழ்க்கையும் மாறும்” என்று மனவியல் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ஏனாம்?

அதுதான் இயற்கையின் நியதி. பிறக்கும் போதே உடன் பிறந்ததை அப்படி எளிதாய் மாற்றி விட முடியுமா என்ன? எளிதல்ல; ஆனால் சாத்தியம். நிச்சயமாய் சாத்தியம்.

“எப்படி? பிரச்சனையே இல்லையா?”

உண்டு. அதில் பிரச்சனை உண்டு!

தடை!

மாற வேண்டும் என்று நினைக்கும் போதுதான் தடை ஒன்று ஏற்படும். மாற்றம் எளிதாய் நிகழவிடாது அந்தத் தடை தடுக்கும். அது நியதி.

“தொந்தி, தொப்பை, மேல் மூச்சு, கீழ் மூச்செல்லாம் வாங்குகிறது. என்னவோ சிக்ஸ் பேக்காமே அதெல்லாம் வேண்டாம், குனிந்து கால் விரலைப் பார்க்க முடிந்தால் உத்தமம். அப்பொழுதாவது மனைவி, ஏதேனும் கொஞ்சம் காதல் பார்வை பார்க்கக் கூடும்“ என்று ஆசை ஏற்பட, பலநாள் மனப் போராட்டத்திற்குப் பிறகு டயட் முடிவிற்கு வந்திருப்பீர்கள். அந்த வாரம் தான் நெருங்கிய உறவின் திருமணமும் நாலைந்து நாள் வைபவமுமாக ஆடு, கோழியெல்லாம் பலவிதத்தில் வடிவமைக்கப்பட்ட உணவு, பிரியாணி, நெய் ஊறும் பலகாரம் (சைவ உணவாளர்கள் பிஸி பேளா பாத்திலிருந்து குலாப்ஜாமூன் வரை கற்பனை செய்து கொள்ளவும்) என்று உங்கள் முன் தோன்ற……. உங்களது தீர்மானம் காரியக் கமிட்டி கூட்டமெல்லாம் இல்லாமல் தள்ளி வைக்கப்படும்.

ஒருவழியாய் அது முடிந்தால் அடுத்த வாரம் உங்கள் தெருமுனையில் சுத்தமான, சுகாதாரமான பேக்கரி தொடங்கப்படும். அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் போது, மணக்கும் சமூசாவும் பக்கோடாவும் இன்ன பிறவும் உங்கள் தீர்மானத்தைத் தள்ளிப் போட வைக்கும். அதற்கடுத்த வாரம் திடீரென ஒரு வேலை நிமித்தம் மனைவி ஊருக்குக் கிளம்பிப் போக நேரிட………. எந்த ஹோட்டலில் டயட் மீல்ஸ் போடுகிறார்கள்? இப்படியே ஏதோவொரு தடை ஏற்பட்டு, ஏற்பட்டு, டயட் தீர்மானம் என்பது காவிரி ஆணையத் தீர்ப்பாக மாறிவிட்டிருக்கும்.

மாற்றம் நிகழத் தடை இப்படித்தான்.

சம்பாதிக்கும் பணமெல்லாம் தண்ணீராய் இறைந்து விரயமாகிறதே! இந்த மாதம் எப்படியாவது ஒரு தொகையைச் சேமித்து விடவேண்டும் என்று அந்தப் பெண் மேனேஜர் தீர்மானித்து, “இந்த மாதம் புதுப் புடவை, புதுச் செருப்பு, புது லிப்ஸ்டிக், எல்லாவற்றி்ற்கும் நோ!“ என்று அப்படி இப்படி பணம் சேமித்து வைக்கும் போதுதான் அந்தப் படுகோர விபத்து நிகழும். படு பத்திரமாய் பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த அவரது ஸ்கூட்டியை இடுத்துத் தள்ளிவிட்டு போயிருப்பான் ஆட்டோக்காரன். இன்ஷுரன்ஸும் இல்லை. மெக்கானிக் பார்த்து விட்டு, ரிப்பேருக்கு அளித்த எஸ்டிமேட் அவரது அந்த மாதச் சேமிப்பையெல்லாம் தாண்டியிருக்கும்! இதில் அவர் பிழை என்ன? ஒன்றும் இல்லை. மாற்றம் நிகழத் தடை, அவ்வளவே!

அங்கே அப்படியென்றால், மற்றொரு குடும்பத்தில் நிகழ்ந்தது என்ன? அங்கே மனைவிக்கு எப்பொழுதுமே குறை.

“உங்களை என்ன ஹீரோ மாதிரியா டிரெஸ் பண்ணிக்கச் சொல்றேன்? கொஞ்சம் மேட்சா, ஷர்ட், கொஞ்சம் அழகான ஷு, ஒரு நல்ல சலூன் விஸிட், அப்படின்னு நாசூக்கா, டீஸென்ட்டா இருக்கச் சொல்றேன்.” எனக் கணவனிடம் முறையிட,

“எல்லாம் இது போதும். இந்த வயசில என்னத்தை ஸ்டைல்?”

“ஸ்டைலைப் பற்றி யாரு சொன்னது? இப்படி ஏனோ தானோன்னு போட்டுக்காம இருந்தா பத்தாது.”

மனைவி மற்றும் பிள்ளைகளின், அங்கலாய்ப்பு, அன்புத் தொல்லை தாங்காமல் அன்று மேட்சாய் டிரஸ் தெரிந்தெடுத்து, அக்கறையாய் அயர்ன் செய்து அணிந்து தெருவில் இறங்கினார் அவர். பைக்கை ஸ்டார்ட் செய்யும் போது அது தோன்றியது. அவசர அவசரமாய் வீட்டிற்குள் வந்து பார்த்தால்…….. சந்தேகமேயில்லை, பேண்ட் பின்னால் தையல் பிரிந்திருந்தது. “எனக்கு இதெல்லாம் சரிப்படாது. அப்போதே சொன்னேனே கேட்டியா?” என்ற இரைச்சல் கேட்டு ஓடிவந்தார் மனைவி.

என்ன பெரிய பிரச்சனை இங்கு?

மாறாதே நீ! அது உனக்கு ஒத்துவராது என்று தடை!

நிகழும்! இப்படியெல்லாம், அல்லது இப்படி ஏதாவது, நிகழும்.

ஆனால் நமக்கு சரிப்படாது என்று பழைய நிலைக்குத் திரும்பிவிடுவதோ, முயற்சிகளை கைவிடுவதோ கூடாது.

உணர வேண்டும்!

என்னவென்று?

மாற்றம் எதிர்ப்புக்கு உட்பட்டது என்பதை உணர வேண்டும்.

எனவே மாற வேண்டும் என்று யோசித்தவுடன் எதிர்ப்புக்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்!
கருத்துக்கள் (4)Add Comment
0
...
எழுதியவர்: VijayaLakshmi.G, July 11, 2010
படித்து மனம் லேசாகி இருக்கிறது.
நன்றி!
0
...
எழுதியவர்: M.Mohamed Jaffar Sadique, July 14, 2010
"எண்ணம்போல் வாழ்வு" - இது தமிழ் பழமொழி
"எண்ணத்தின் அடிப்படையில் தான் மனிதனின் செயல் அமைந்திருக்கிறது" - இது நபி மொழி
இவைகளின் விரிவாக்கம் தான் இந்த கட்டுரை.
0
...
எழுதியவர்: Thavakkal Batcha, London, July 16, 2010
I have been reading this. Very nice.
0
...
எழுதியவர்: n.s.prabaharan, July 22, 2010
sir,very fine articles.pl keep publish like this.
thank u
n.s.prabaharan

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்