புதுச்சேரி: புதுவை மாநிலம் முழுவதும் உள்ள சமூக விரோதிகளை சிறப்பு அதிரடிப் படையினர் இருபது நாள்களுக்குள் தேடி பிடிக்க உள்ளனர் என்று புதுவை முதல்வர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
புதுவையில் ரெளடிகள் ஒருவரை ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்வது தொடரும் நிலையில் மாநில சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம் புதுவையில் முதல்வர் வைத்திலிங்கம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. உள்துறை அமைச்சர் இ.வல்சராஜ் மற்றும் காவல்துறை மற்றும் அரசு உயரதிகாரிகள் இக் கூட்டத்தில் பங்கேற்றனர். இக் கூட்டத்துக்குப் பின்னர் முதல்வர் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியது
கடந்த ஆண்டு நடந்த கொலைகளுக்கும், தற்போது நடக்கும் கொலைகளுக்கும் வித்தியாசம் உள்ளது. தற்போது நடக்கும் கொலைகளில் நாட்டு வெடிகுண்டு பயன்படுத்தப்படுகிறது. இது புதுவையின் அமைதிக்கு ஊறு விளைவிக்கும் செயல்.
புதுவையில் 20 நாள்களுக்கு சிறப்பு அதிரடிப் படையினர் ரெüடிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவர். வெடிகுண்டுகள் பிற ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா என்றும் இவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவார்கள். வெடிகுண்டு கலாசாரத்துக்கு யார் ஆதரவாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுவையில் குண்டர் தடுப்பு சட்டம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. அமைச்சகம் காஸ்மெடிக் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சில விளக்கங்கள் கேட்டு கருத்துருவை அனுப்பியுள்ளது. அதற்கான விளக்கங்களை அரசு இன்னும் 15 நாள்களில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்ப உள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டம் பயன்படுத்த துணைநிலை ஆளுநரிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அதை செயல்படுத்த கமிட்டி அமைக்க வேண்டும்.
அதனால் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், புதுச்சேரி ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருவர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு, அதற்கான கோப்பு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார் முதல்வர்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




