புதுச்சேரி:புதுவையில் உள்ள அனைத்து சூதாட்ட விடுதிகளையும் மூட புதுவை காவல்நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத காவல் நிலையங்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து புதுவை டிஜிபி அனைத்து காவல்நிலையங்களிலும் அதிரடி ஆய்வு மேற்கொள்ள உள்ளார். கப்பல் மற்றும் லாரிகளில் சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது போன்ற இடங்களில் ஏற்படும் மோதல்கள், ஏற்றாமலோ, இறக்காமலோ பணம் கேட்பது போன்ற பிரச்னைகளில் காவல்துறையினர் கண்காணிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பகுதியில் இருந்துதான் குற்றச்செயல் செய்வோருக்கு நிதி ஆதாரம் கிடைக்கிறது. எனவே இதைத் தடை செய்ய வேண்டும்.
எந்த வீதியிலும், சாலையிலும் கும்பலாக இருந்துகொண்டு பேசுவது, கிண்டல் செய்வது போன்றவை தடுக்கப்படும். புதுச்சேரியில் குற்றங்களை கண்டுபிடிப்பது, நடைபெறாமல் தடுப்பது போன்ற பணிகளில் சிறப்பாக செயல்படும் காவல்துறையினர், பதக்கம், பதவி உயர்வு, பணமுடிப்புகள் வழங்கி கெளரவிக்கப்படுவார்கள். நடந்த நடக்கவிருக்கும் குற்றங்கள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும். தகவல் அளித்தவர் பற்றிய ரகசியம் பாதுகாக்கப்படும்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




