துபாய்: அமீரகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தகவல்கள் பிளாக்பெரி மொபைல் ஃபோன்கள் மூலம் வருவதாக ஐக்கிய அரபு குடியரசு கூறியுள்ளது. பிளாக்பெரி 1போனுக்கு தடை விதிப்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
இணையதளம், இமெயில், ஃபேக்ஸ், ஜிபிஆர்எஸ் போன்ற அதிநவீன வசதிகள் கொண்ட பிளாக்பெரி செல்போன் ‘கனடாவை சேர்ந்த ரிசர்ச் இன் மோஷன் என்ற நிறுவனத்தின் தயாரிப்பு. இது பிரமாண்ட திரை, சிறந்த பயன்பாடுகள் என கையடக்க கணிணி போலவே செயல்படுகிறது. இந்நிலையில், இப் ஃபோன் பற்றி சில சர்ச்சைகளை ஐக்கிய அரபு குடியரசு கிளப்பியுள்ளது. அந்நாட்டின் டெலிபோன் ஒழுங்குமுறை ஆணையம் இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிளாக்பெரி ஃபோன்கள் வழியாக வரும் சில இணையங்களின் செய்தி வடிவங்களை ஆய்வு செய்தபோது அவை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதுபோல தெரிகிறது. மேலும், அரபு நாட்டின் சட்ட எல்லைக்கு அப்பாற்பட்டதாகவும் உள்ளன. இத்தகவல்களை, சேவைகளை மக்கள் முறைகேடாகவும் நாட்டின் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு எதிராகவும் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கிறது.
அமீரகத்தின் சட்ட எல்லைக்கு உட்பட்டும் மக்கள், நுகர்வோர் பாதிக்கப்படாத வகையிலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையடுத்து, அரபு குடியரசின் சட்ட எல்லைக்கு உட்பட்டு செயல்படும் வகையில் பிளாக்பெரிக்கு விதிமுறைகள் அல்லது தடை விதிப்பது குறித்து அந்நாட்டு அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




