பெங்களூர்: இங்கிலாந்துடனான பாதுகாப்புத் துறை உறவை மேலும் வலுப்படுத்துவதற்காக பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடம் இருந்து சுமார் ரூ.9500 கோடி செலவில் 57 நவீன ஹாக் பயிற்சி ஜெட் விமானங்களை வாங்க இந்தியா புதன்கிழமை ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தியா கடந்த 2004-ம் ஆண்டு பிரிட்டன் நாட்டின் விமான தயாரிப்பு நிறுவனமான பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸிடம் இருந்து 66 ஹாக் நவீன ஜெட் பயிற்சி விமானங்களை வாங்கியது. இந்நிலையில் மேலும் ஹாக் விமானங்களை வாங்க பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் (எச்.ஏ.எல்.) புதன்கிழமை பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் முன்னிலையில் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.
அப்போது எச்ஏஎல் தலைவரும் மேலாண் இயக்குனருமான அசோக் நாயக் மற்றும் கர்நாடக உள்துறை அமைச்சர் வி.எஸ். ஆச்சார்யா ஆகியோரும் உடனிருந்தனர். எச்ஏஎல்லின் வர்த்தக திட்டப்பிரிவு இயக்குனர் பி. செüந்தர் ராஜன், மற்றும் பிரிட்டிஷ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கை கிரிப்த்ஸ் ஆகியோரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த விமானங்கள் எச்ஏஎல் விமான தயாரிப்பு மையத்தில் தயாரிக்கப்படும். அவற்றில் 40 விமானங்கள் இந்திய விமானப்படையிலும் 17 விமானங்கள் இந்திய கப்பற்படையிலும் சேர்க்கப்படும் என்று பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் நிறுவன மேலாண் இயக்குனர் ஆன்ட்ரூ கலாகர் நிருபர்களிடம் தெரிவித்தார். இந்திய விமானப்படைக்கு ஹாக் விமானம் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது

| < முந்தையது | அடுத்தது > |
|---|




