சென்னைக் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கடல் நீர் சத்திகரிப்புப் பணிகளை தமிழக முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைக்கிறார்.சென்னை நகரின் குடிநீர் தேவைக்கும், வழங்கும் அளவிற்கும் உள்ள இடைவெளியைக் குறைத்து, குடிநீர் வழங்கும் அளவை அதிகரிப்பதற்காக தமிழக அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறனுடன் எதிர்மறை சவ்வூடு பரவுதல் முறையில் கடல்நீரை குடிநீராக்கும் முதலாவது நிலையத்தினை சொந்தமாக வடிவமைத்து கட்டுமானம் செய்து, இயக்கி மாற்றித் தருதல் என்ற அடிப்படையில் குடிநீரை வழங்குவதற்காக சென்னை வாட்டர் டிசாலிநேஷன் லிமிடெட் (சி.டபிள்யூ.டி.எல்) நிறுவனத்துடன் சென்னை குடிநீர் வாரியம் 25 வருடத்திற்கான மொத்த குடிநீர் கொள்முதல் ஒப்பந்தத்தை 13.09.2005 அன்று மேற்கொண்டது.
இந்த நிலையத்தின் அனைத்து பணிகளும் தற்போது செய்து முடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையத்திலிருந்து கிடைக்கப்பெறும் குடிநீரை சென்னை நகர விநியோகத்திற்கு கொண்டு செல்ல தேவைப்படும் கட்டமைப்புப்பணிகளை அமைக்கும் பொருட்டு ரூ.93 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு நிதி உதவியின் கீழ் ரூபாய் 87.80 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது
அதன்படி, காட்டுப்பள்ளியில், 2.5 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ் நிலை தொட்டி மற்றும் நீரேற்றும் நிலையம், மணலியில் 2.5 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை தொட்டி, மாதவரத்தில் 10 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை தொட்டி மற்றும் நீரேற்றும் நிலையம், செங்குன்றத்தில் 6 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை தொட்டி ஆகிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றைத் தவிர, சுமார் 38 கிலோ மீட்டர் நீளத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாய்கள் பதிக்கப்பட்டு, சென்னை நகர விநியோகத்திற்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து சென்னைக்கு தினம்தோறும் 10 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும். குடிநீர் வழங்கலை முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




