கடந்த 1963 வரை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 60ஆக இருந்தது. பின்னர் அது 62 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது அவர்களின் ஓய்வு வயதை 62இல் இருந்து 65 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை, தலைநகர் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம் இந்தியாவின் 21 உயர் நீதிமன்றங்களில் பணிபுரியும் மொத்தம் 630 நீதிபதிகள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65 ஆக இருப்பதை தொடர்ந்து பல உயர் நீதி மன்ற நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிய விரும்புகின்றனர். இப்போது எடுக்கப்பட்டுள்ள முடிவின் மூலம் உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிய விரும்புவோர் எண்ணிக்கை குறையும் என்று அமைச்சக அதிகாரி கூறினார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்தும் முயற்சிகளை 2008 ஏப்ரலில் அப்போதைய சட்ட அமைச்சர் எச்.ஆர்.பரத்வாஜ் துவக்கினார். கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததன் காரணத்தால் அப்போது அம்முயற்சி கைவிடப்பட்டது. எனவே, நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத் தொடரிலேயே இதற்கான மசோதாவை தாக்கல் செய்ய சட்ட அமைச்சகம் முயற்சிக்கிறது. இருப்பினும், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்பதால் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை செய்து ஒத்த கருத்தை எட்ட சட்ட அமைச்சகம் முயற்சி செய்து வருகிறது.
இதுவரை 40 லட்சம் வழக்குகள் நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதும், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் 895 பணியிடங்களில் தற்போது 630 நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கவை.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




