மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, மேற்குவங்க ஆளும் கட்சியான சி.பி.எம். தன்னை கொல்ல தற்கொலைப் படையினை தயார் செய்துள்ளது என்று அதிரடி குற்றச்சாட்டை கூறியுள்ளார். சி.பி.எம். கட்சி மீது பல்வேறு புகார்களை கூறிவரும் மம்தா பகிரங்கமாக இவ்வாறு கூறியிருப்பதால் மேற்கு வங்க அரசியலிலும் இந்திய அரசியலிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உறுதி அளித்துள்ளார்.
மம்தா பானர்ஜி ரெயில்வே மந்திரியாக பதவி ஏற்றபின் 6 பெரிய ரெயில் விபத்துக்கள் ஏற்பட்டு உள்ளன. இவற்றில் 288 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஏராளமான சிறு சிறு விபத்துக்களும் நடந்து வருகின்றன. அனைத்து விபத்துக்களிலும் சுமார் 500 பேருக்கு மேல் பலியாகி இருக்கின்றனர்.ரெயில்வே துறையில் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாதது தான் இந்த விபத்துக்களுக்கு காரணம் என்று கூறி சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகள் மம்தா பானர்ஜி பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி வருகின்றன.
சமீபத்தில் மேற்கு வங்க மாநிலம் மித்னாபூரில் நடந்த ரயில் கவிழ்ப்பு சம்பவத்துக்கு ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிதான் காரணம் என்று மறைமுகமாகக் கூறி இருந்தார் மம்தா பானர்ஜி.ரயில் கவிழ்ப்புக்கு, நக்ஸலைட்டுகளே காரணம், இடதுசாரிகள் காரணம் அல்ல, என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதால் மம்தா அமைச்சரவைக் கூட்டத்தை புறக்கணித்தார். மத்திய அரசுடன் ஏற்படும் மோதலால், அடிக்கடி அமைச்சரவைக் கூட்டங்களை ஏதாவது காரணத்துக்காக புறக்கணித்து வருகிறார் மம்தா.மேலும், மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் எனவும் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், தனது கட்சியினரை கொலை செய்துவிட்டு மாவோயிஸ்டுகளைக் கொன்றதாக ஆளும்கட்சியினர் கூறுவதாகவும், தன்னையும் தற்கொலைப்படையைக் கொண்டு கொலை செய்ய முடிவு செய்துள்ளனர் என்றும் மம்தா கூறியுள்ளார்.என்னுடைய அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசின் அமைச்சர்களும்,தலைவர்களும் தொடர்ந்து கண்காணித்தும் வேவு பார்த்தும் கொண்டிருக்கின்றனர்.ஆளும் கட்சியினர் கோழைகள்; அதனால் தான் என்னை அவர்களால் அரசியல் ரீதியாக சந்திக்க முடியவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




