புனே: நண்பர்கள் தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு மது அருந்தி ஆர்பாட்டம் செய்த கல்லூரி மாணவ மாணவியர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
புனே அருகில் பிரசித்தி பெற்ற சிம்பயோசிஸ் நிர்வாக பயிற்சியியல் கல்லூரியில் மாணவ மணவியர் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியை சேர்ந்த எம்.பி.ஏ. மாணவ, மாணவிகள் நண்பர்கள் தினத்தை கொண்டாட ஒரு பண்ணை வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு இரவு விடிய, விடிய நண்பர்கள் தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.
மது பானங்களை பருகி, ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாட்டமாக இருந்தனர். இவர்கள் போட்ட ஆர்பாட்டம் காரணமாக அந்த பகுதியினர் இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து உள்ளூர்வாசிகள் காவல்துறையிடம் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் அந்த பண்ணை வீட்டை சுற்றிவளைத்தனர். குடிபோதையில் ஆடிப் பாடிக்கொண்டிருந்த 300 மாணவ மாணவிகளை கைது செய்தனர். பின்னர் 100 மாணவிகளை மட்டும் எச்சரித்து விட்டு விட்டனர். இது குறித்து மேலும் விசாரணை நடக்கிறது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




