

செம்மொழி மாநாட்டுக்கு பின்னர் ஓய்வு பெறப்போவதாக கலைஞர் சொன்னது என்ன ஆச்சு? - தாஜ்
கருணாநிதி, மூன்று ஆசைகளை நிறைவேற்றிவிட்டு ஓய்வு பெறப்போவதாகச் சொல்லியிருந்தார். அம்மூன்றனுள் அண்ணா நூற்றாண்டு நூலகம் திறக்கும் பணி இருக்கிறதே?
அதற்குள் அவரை வீட்டுக்கு அனுப்ப உங்களுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்?

ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அரசியல்வாதிகள் முதலீடாகத்தான் இதை செய்கின்றனர் என்பதை மக்கள் எப்போதுதான் உணருவார்கள்? - ராகவ்
மக்கள் இன்னும் உணராமலா இருக்கிறார்கள்?. ஊடகங்களின் தாக்கம் எல்லா இடத்தும் இருப்பதால் அரசியலும் மக்களுக்குத் தெரியும். எனினும் ஐந்தாண்டுகள் அல்லது நான்காண்டுகளுக்கு ஒருமுறை இப்படித் திடீரெனப் பணம் கிடைப்பதால் அவ்ர்கள் பெற்றுக்கொள்கின்றனர். தமிழ்நாட்டின் சில கிராமங்களில் தேர்தல் நேரத்தில் வாக்குகளைப் பொது ஏலம் விட்டு, அதிகத் தொகை தரும் கட்சிக்கு ஒட்டுமொத்தமாக வாக்களித்து, அப்பணத்தை கிராமத்தின் நலத்துக்குச் செலவழிப்பதாக முன்னர் வார இதழ் ஒன்றில் படித்த நினைவு உள்ளது.
வெளி மாநிலத்தவர்கள் நீதிபதியாக இருக்கும்போது தமிழ் எப்படி வழக்கு மொழியாக இருக்க முடியும்? - தமிழ் நேசன்
உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் மட்டுமே வெளிமாநிலத்தவர் என்பதால், தமிழ் வழக்குமொழி என்பதில் பெரிய சிக்கல் இல்லை பிற, அனைத்து நீதிமன்றங்களிலும் உள்ளூர் மொழியில் வழக்காடும்போது வழக்காளிகளுக்குத் தம் வழக்கின் போக்கு, தம் சார்பாய் வழக்காடும் வழக்குரைஞரின் திறமை,எதிர் அணியின் வலு அல்லது வலுவின்மை போன்றவற்றை அறியமுடியும்.
இந்தியர்கள் வெளிநாடு சென்று வேலை செய்யும் நிலை மாறி வெளிநாட்டவர் இந்தியாவுக்கு வேலைத் தேடி வரும் காலம் வருமா? - விஜய்
என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில்? என்று கேட்டார் கவிஞர்.
நாட்டு வளங்களை அரசியல்வாதிகளுடன் சேர்ந்து தனியார் மற்றும் பன்னாட்டு முதலாளிகள் சுரண்டுகின்றனர். மீந்திருப்பது மனித வளம் மட்டுமே. அதையும் வெளிநாடுகளில் விற்கின்றோம்.
சில குறிப்பிட்ட கல்விப் பட்டங்கள் பெற்றோர் மட்டுமே பட்டத்திற்குரிய பணிகள் செய்கின்றனர்.
மற்றவர்கள் எல்லோருமே போலி மதிப்பும் வெட்டி பந்தாவும் காட்டி உள்ளுரில் செய்யத் தயங்கும் வேலைகளைக் கூச்சமின்றி வெளிநாட்டில் செய்கிறோம்.
இந்தியாவின் மக்கள் தொகைக்கேற்ப இந்தியர்களுக்கே உள்நாட்டில் வேலை வாய்ப்பு இல்லை எனும்போது வெளிநாட்டினருக்கு வாய்ப்பா?
எனினும் இலங்கை, நேப்பாளம், பூடான், பங்களாதாஷ் போன்ற அண்டை (வெளி)நாட்டினர் நம்நாட்டின் சில பகுதிகளில் வேலை செய்கின்றனர். “விரலுக்கேத்த வீக்கம்”.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? - ரஜினி ரசிகன்
யாரும் அரசியலுக்கு வரலாம்; யாருக்கும் தடையில்லை. ஆனால் யாரையும் "வா" என்று கையைப்பிடித்து இழுக்கவோ "வராதே" என்று தடுக்கவோ கூடாது. ரஜினி அரசியலில் நுழைய விரும்பினால் அவரைத் தடுப்பார் எவருமிலர்.
இந்த நாட்டையும் மக்களையும் முன்னேற்றும் மந்திர சக்தி ரஜினியிடம் இருக்கிறது என்று உறுதியாக நம்பியா, “அரசியலுக்கு வா” என அவரை அழைக்கின்றனர்? தமக்குச் சில பதவிகள், பந்தாக்கள் வரும் என எதிர்பார்ப்புடனேயே இந்த அழைப்புகள்?
வணங்காமுடி ரஜினிக்கு நெருக்கமாகவோ ரஜினியின் உள்வட்டத்திலோ இல்லையெனினும் வணங்காமுடியின் பார்வையில் ரஜினி ஒரு நல்ல மனிதர்; நாட்டு நடப்புகள் அறிந்தவர்; அதனால் கட் அவுட் வைப்போரும் அதற்குப் பாலாபிஷேகம் செய்வோரும் போடும் கூச்சலை நம்பி எந்த முடிவும் எடுக்கமாட்டார்.

இளவரசி டயானவின் மரணம் தற்செயலாக நடந்ததல்ல அது திட்டமிட்ட கொலை என்கிறார்களே! அதுபற்றிய உங்கள் பார்வை என்ன? - சாகுல்
டயானாவின் மரணம் நடந்த சில நாட்களுக்குள்ளேயே இந்தக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. டயானாவுடன் மரணமடைந்த டோதியின் தந்தைகூட இந்த ஐயத்தை வெளிப்படுத்தியிருந்தார். இத்தனை ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அந்தச் செய்திக்குப் புத்துயிர் கொடுக்கப்பட்டுள்ளது; அவ்வளவே! 
இங்கு கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் உங்களால் தனித்து பதிலளிக்க முடிகிறதா அல்லது உதவிக்கு யாரையாவது வைத்திருக்கிறீர்களா? - குமார்
அதைத்தெரிந்து என்ன செய்யப்போகிறீர்கள்?
டாலருக்கான மதிப்பும் தங்கத்திற்க்கான மதிப்பும் சில சமயங்களில் கூடவும் குறையவும் செய்கிறதே அது எப்படி? - ஜலால்
தங்கத்திற்கான தேவையையும் வினியோகத்தையும் –supply and demand -- பொறுத்து London Bullion Market Association (LBMA), எனும் அமைப்பு, தங்கத்தின் விலையை முடிவு செய்கிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவுடன் இருக்கும்போது தங்கத்தின் விலை குறையும்; அப்படியே எதிர்மறையாகத் தங்கத்தின் விலை கூடும்போது அமெரிக்க டாலரின் மதிப்புக் குறைந்திருக்கும்.
| கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் இங்கே க்ளிக்கவும். |

| < முந்தையது | அடுத்தது > |
|---|




