ஜம்மு-காஷ்மீர்: காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு வீரர்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டதில் ஒரு மாணவன் உட்பட நால்வர் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
இதற்கிடையே, மோதலை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டத்தை மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா ரத்து செய்து விட்டார். முஸ்லிம்களின் புனித மாதமான நோன்பு நேற்று முதல் இந்தியா முழுவதும் ஆரம்பித்தது. இதனால் இரு வாரங்களாக தடை செய்யப்பட்டு இருந்த வெள்ளிக்கிழமை தொழுகைக்கு அனுமதியளிக்கப்பட்டது.
இதற்கிடையே, குப்வாரா என்ற பகுதியில் இன்று அதிகாலை தொழுகையை முடித்து கொண்டு வெளிவந்த 10-ம் வகுப்பு மாணவன் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டதை அறிந்து அப்பகுதி மக்கள் மீண்டும் போரட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
சோப்பூர், பதான் என்ற இடங்களிலும் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் மூவர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே பிரதமரின் அமைதி உடன்பாடு குறித்து பேசிய ஹூரியத் மாநாட்டு கட்சி தலைவர்கள், தங்களில் கோரிக்கைகள் நிறைவேற்றாதவரை, போராட்டம் தொடரும் என எச்சரித்துள்ளனர். பாதுகாப்பு படையினர் உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும், பாதுகாப்பு அதிகாரிகளின் சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற தங்களின் கோரிக்கைகளிலிருந்து பின்வாங்க போவதில்லை என அறிவித்துள்ளனர்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




