கொழும்பு : இந்திய - இலங்கை அணிகளுக்கிடையான கிரிக்கெட் போட்டியில் சேவாக் சதம் அடிக்க ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் சுராஜ் ரந்திவ் நோ-பால் போட்டு சேவாக் சதம் அடிக்க விடாமல் தடுத்தது கிரிக்கெட் உலகில் மிகப் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகின்றது.
இது சம்பந்தமாக ரந்திவும் இலங்கை கிரிகெட் நிர்வாகமும் மன்னிப்பு கேட்டாலும் சுராஜ் நோ பால் போட்டதற்கு இலங்கை கிரிக்கெட் கேப்டன் சங்கக்கராவே காரணம் என்ற செய்தியால் மீண்டும் இவ்விஷயம் பரபரப்பானது. இலங்கை கிரிகெட் நிர்வாகம் தணிக்கை செய்யப்படாத வீடியோவை கேட்டுள்ளது.
ஸ்டம்ப் மைக்ரோ போனில் அந்த நோபாலுக்கு முன் இன்னும் ஒரு ரன் தான் பாக்கி உள்ளது என்று சங்கக்கரா குரல் ஒலித்ததாக கூறப்படுகிறது. அதே சமயம் போட்டிக்கு பின் நோ பால் வீசியதற்காக பவுலரை சங்கக்கரா கண்டித்தது இரட்டை வேடமா அல்லது அவருக்கு உண்மையில் தொடர்பில்லையா என்பது பரபரப்பு செய்தியாக உள்ளது.
ஆனால் இலங்கை செய்தி ஊடகங்களோ கவர் பாயிண்டில் பீல்டிங் செய்து கொண்டிருந்த தில்ஷன் தான் (ஓனே நம், நோ பால் ஏகக் தன்னா புலுவன்) நீ விரும்பினால் ஒரு நோ பால் போடலாம் என்று சொன்னதாக கூறப்படுகிறது. இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




