தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன் இளஞ் சிறார்களுக்கெதிராக ஷின் பெட் எனப்படும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை கடும் வன்முறைகளைப் பிரயோகித்து வருவதாக சிறுவர் பாதுகாப்புக்கான சர்வதேச அமையம் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஸியோனிஸ ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்பில் குற்றமிழைத்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளவர்களும், அவர்களில் சிறு தவறிழைத்ததாகச் சந்தேகிக்கப்படுபவர்களும்கூட மிகக் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர் என்றும் மேற்படி அமைப்பு கருத்துரைத்துள்ளது.
கடந்த புதன்கிழமை (18.08.2010) மேற்படி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப்படை ஜூலை 2 ஆம் திகதி மேற்குக்கரைப் பிரதேசத்திலுள்ள யிட்ஸார் யூதக் குடியேற்றத்திற்கருகில் தீ மூட்டினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் உஸைர் நகரைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களைக் கைதுசெய்துள்ளது என்றும், இச்சிறுவர்கள் மூன்று வாரகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பெட்டாஹ் டெக்வாவிலுள்ள ஷின் பெட் தலைமையகத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர் என்றும் தெரிவித்துள்ளது.
15, 16 வயதுடைய இச்சிறுவர்கள் கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் ஆக்கிரமிப்புப் படையினரால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். மூன்று வாரகாலம் ஜன்னல்களோ போதிய காற்றோட்டமோ அற்ற மிகக் குறுகலான இருட்டறைகளில் அவர்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தச் சிறுவர்களுக்குப் போதிய உணவு வழங்கப்படாததோடு, ஒருநாளைக்கு அரைமணிநேரம் மட்டுமே அறையைவிட்டு வெளியேற அனுமதியளிக்கப்பட்டிருந்தது. சிறைப்படுத்தப்பட்டிருந்த மூன்று வாரங்களில் ஒரே ஒருதரம் தமது உறவினர்களைச் சந்திக்க அனுமதி கிடைத்தபோதிலும், நேருக்குநேர் பேசிக்கொள்ள வாய்ப்பளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று வாரகாலத்தின் பின்னர் சம்பவ தினத்தன்று மேற்படி சிறுவர்கள் இருவரும் பள்ளிக்கூடத்தில் இருந்துள்ளனர் என்பது உறுதியாகத் தெரியவந்ததில் மேலதிக விசாரணைகளின்றி விடுவிக்கப்பட்டுள்ளனர். நிரபராதிகளான இரண்டு சிறுவர்கள் இவ்விதம் நியாயமற்ற முறையில் தண்டனைக்குள்ளாக்கப்பட்டமை குறித்து மேற்படி அமைப்பு தன்னுடைய கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல நியாயத்துக்குப் புறம்பாக பலஸ்தீனை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள ஸியோனிஸ ஆக்கிரமிப்பாளர்களுக்கு எந்த நேரம் என்ன நடக்குமோ என்ற குலைநடுக்கத்தினால் கைக்குழந்தை, சிறுவர், தொண்டுகிழவர் என்று யாரைக்கண்டாலும் குற்றவாளிகளாக, சந்தேக நபர்களாகப் புலப்படுகின்றனர். இந்நிலையில், பள்ளிசெல்லும் வயதிலுள்ள ஏராளமான சிறுவர்கள் இஸ்ரேலிய சிறைகளில் தொடர்ந்தும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




