கோவை : மின்சாரக் கசிவால் கொசு விரட்டி பாட்டில் வெடித்து சிதறி தீப்பிடித்ததில் உறங்கிகொண்டிருந்த கல்லூரி மாணவி தீயில் கருகினார். இவரை காப்பாற்ற சென்ற அவரது தந்தையும் தீக்கிரையானார்.
கோவை மாவட்டம் ஒண்டிபுதூர் அருகே காமாட்சிபுரம் திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்தவர் தாமஸ்(50); பாப்பம்பட்டி பிரிவில் உள்ள இரும்புக் கடை ஊழியர். இவரது மகள் அல்போன்சா(19). உக்கடம் அருகே ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவி. நேற்று முன்தினம் இரவு அல்போன்சா தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலையில் அந்த அறையில் இருந்து புகை வருவதை பார்த்த தாமஸ், அவரது மனைவி ஜான்சியும் உடனே அந்த அறைக்கு சென்ற போது படுக்கையுடன் சேர்ந்து மகளும் எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அறையிலிருந்து வந்த புகையின் நெடியால் மயங்கி கணவனும், மனைவியும் விழுந்தனர்.
நள்ளிரவில் வீடு தீப்பற்றி எரிவதை பார்த்து பக்கத்து வீட்டார், விரைந்து சென்று மயங்கி கிடந்த தாமசையும், ஜான்சியையும் எடுத்து வந்து முதலுதவி செய்தனர். இதன் பின், அப்பகுதி மக்கள், வீட்டில் நுழைந்து பார்த்தபோது மாணவி அல்போன்சா தீயில் கருகி இறந்து கிடந்தார். இத்தகவல் தெரிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீ அணைத்தனர். அப்போது, மயக்கம் தெளிந்து எழுந்த தாமஸ் அலறியபடி மீண்டும் வீட்டினுள் சென்றார். அப்போது தீயில் அகப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனே, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையாக சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து சிங்காநல்லூர் காவல்துறையினர் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், மாணவி அல்போன்சா தூங்கிய அறையில் கொசு விரட்டி பாட்டில் வெடித்து சிதறியதால் அதன் நெடியில் மயக்கமடைந்து தீயில் கருகி இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்

| < முந்தையது | அடுத்தது > |
|---|




