புது தில்லி : இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படை சம்பளம் 3 மடங்கு உயர்த்தப்பட்ட போதும் அதை ஏற்க மறுத்து இது குறைவான ஊதியம் என்றும் இக்குறைவான ஊதிய உயர்வு தங்களுக்கு ஏற்பட்ட அவமானம் என்று நாடாளுமன்றத்தை இயங்க விடாமல் ஸ்தம்பிக்க வைத்தது தெரிந்ததே.
வளர்ந்த நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு ஒப்பிடும் போது நம் நாட்டு எம்.பி.க்களின் அடிப்படை சம்பளம் குறைவு போல் தோன்றலாம். ஆனால் முழுமையாய் ஆராய்ந்தால் நிலைமையே வேறு மாதிரியாக உள்ளது.
அடிப்படை சம்பளம் என்பது எம்.பிக்கள் பெறும் தொகையில் ஒரு சிறிய பகுதியே. அவர்களின் மற்ற ஊதியத்தையும் கணக்கில் எடுத்து அதை டாலருக்கு மாற்றி நாட்டில் அதை கொண்டு வாங்கும் சக்தியை கணக்கில் எடுத்து பார்த்தால் இந்தியாவின் எம்.பி.க்கள் உலகில் அதிக சம்பளம் வாங்குபவர்களாக கணிக்கப்படும் சிங்கப்பூர், ஜப்பான், இத்தாலி நாட்டு எம்.பிக்களை விட அதிக வருமானம் உள்ளவர்களாக இருப்பது தெரிய வருகிறது.
வீட்டு படி, பயண படி, மருத்துவ படி, தண்ணீர் கட்டணம் போன்றவற்றை கணக்கில் எடுக்காமல் 2009 ஜூன் 1 முதல் 2010 ஜூன் 1 வரை (151 பாராளுமன்ற நாட்கள்) சராசரியாக தொகுதி நிதி, அலுவலக நிதி, தொலைபேசி, இணையம், பர்னிச்சர், மின்சாரம் மற்றும் தின படியுடன் வருடத்திற்கு 20 இலட்சம் ஒரு உறுப்பினருக்கு வழங்கப்படுகிறது.
ஒவ்வோர் எம்.பிக்கும் லோதி எஸ்டேட், அவரங்கசீப் தெரு, துக்ளக் லேன், அக்பர் ரோடு என பிராதன இடங்களில் கொடுக்கப்பட்ட வீடுகளின் மாத வாடகை குறைந்தது 2 இலட்சம் போகும் என்றாலும் நாம் இங்கு 1 இலட்சம் என்றே கணக்கில் எடுப்போம். எனவே ஒரு வருடத்திற்கு 12 இலட்சம் என்றாலும் மொத்தம் 32 இலட்சம் ஆகிறது.
ஒரு எம்.பி.க்கு வருடத்திற்கு 34 தடவை ஏர் - இந்தியாவில் குறைந்தது கொல்கத்தாவிலிருந்து புது தில்லி வருவதற்கு கூட 5 இலட்சம் செலவு பிடிக்கும். எனவே மொத்தம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு சராசரியாக 37 இலட்சம் செலவு பிடிக்கிறது. மேலும் ஒரு சராசரி இந்தியனின் வருமானத்தோடு ஒப்பிடும் போது இது 68 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவுக்கு பிறகும் போதவில்லை என்றால் என்ன தான் சொல்வது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




