சென்னையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மகன் அமர்நாத்-நிவேதிதா ஆகியோரின் திருணம் உள்பட 20 ஜோடிகள் திருமணத்தை ஒரே மேடையில் ஜெயலலிதா நடத்தி வைத்தார். இந்தத் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி ஜெயலலிதா பேசியதாவது:-கழகம் ஒரு குடும்பம் என்றால் அது அ.தி.மு.க.தான். 1 1/2 கோடி தொண்டர்களை கொண்ட இந்த இயக்கத்தை எத்தனையோ சோதனைகள் மன உளைச்சல்களை சந்தித்துதான் எம்.ஜி.ஆருக்கு பிறகு நடத்தி வருகிறேன்.அரசியலுக்கு வந்து விட்டால் மன உளைச்சலும் அமைதியின்மையும் இருக்கத்தான் செய்யும், வெளியே இருப்பவர்களால் மட்டும் அல்ல, கட்சிக்கு உள்ளே இருப்பவர்களாலும் சில நேரங்களில் பிரச்சினை ஏற்படுவது உண்டு.
இருமணங்கள் லயித்து ஒரு சுதியில் சேரும் சங்கீதம் தான் திருமணம் என்றார் அண்ணா. அதைப் போல் மணமக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ஒருவருக்காக ஒருவர் வாழ வேண்டும்.
இந்த நேரத்தில் நான் படித்த கிறிஸ்துமஸ் சிறுகதையை நினைவுப்படுத்த விரும்புகிறேன். ஒரு கிராமத்தில் கணவன்-மனைவி இருவர் அன்புடன் வாழ்ந்து வந்தனர். கிறிஸ்துமஸ் விழாவுக்கு அன்பான தனது மனைவியின் நீண்ட கூந்தலுக்கு “ஹேர் கிளிப்” ஒன்றை பரிசாக கொடுக்கவேண்டும் என்று திட்டமிட்டு இருந்தார்.
அதேபோல் அவரது மனைவி தனது கணவர் நீண்ட நாட்களாக சங்கிலி இல்லாமல் தான் ஆசைப்பட்டு வாங்கிய கைக்கடிகாரத்துக்கு சங்கிலி ஒன்று வாங்கி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அவர்கள் குடும்பம் வறுமையில் வாடிக்கொண்டு இருந்தது.
கிறிஸ்துமஸ் நாளும் வந்தது. ஊர் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா களை கட்டி இருந்தது. மனைவிக்கு அன்போடு வாங்கி வந்த ஹேர் கிளிப்பை கொடுத்தார். அதை வாங்கிய மனைவியோ சந்தோஷப்படாமல் கிளிப்பை மேஜை மீது வைத்து விட்டார். அதைப் பார்த்ததும் கணவருக்கு அதிர்ச்சி. நான் எவ்வளவு ஆசையுடன் வாங்கி வந்தேன். நீ சந்தோஷப்படவில்லையே என்றார். உடனே அவரது மனைவி சொன்னார், எனது நீண்ட கூந்தலை வெட்டி விற்று உங்களுக்கு நான் ஒரு கடிகார சங்கிலி வாங்கி வைத்திருக்கிறேன் என்று சொன்னார்.
அதைக்கேட்டதும் கணவர் சொன்னார், நீ வாங்கி வந்த சங்கிலியையும் நான் அணிய முடியாது. ஏனென்றால் அந்த கடிகாரத்தை விற்றுத்தான் உனக்கு கிளிப் வாங்கி வந்தேன் என்றார். அதைக் கேட்டதும் இருவரும் நமக்குள் இம்மியளவும் குறையாத அன்பு உள்ளது. அது போதும் என்றனர். அதே போல் மணமக்கள் என்றும் மாறாத அன்புடன் ஒருவருக் கொருவர் புரிந்து கொண்டு வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
அன்பு உடன்பிறப்புகளுக்கு ஒரு முக்கிய செய்தி சொல்கிறேன். நாம் வெற்றியை குவிக்கும் நேரம் இந்த வினாடி முதல் வந்து விட்டது. விஞ்ஞானிகள் பாணியில் சொல்வது என்றால் நமது வெற்றிக்கான கவுன்டவுன் தொடங்கி விட்டது.
நமது வெற்றியை தடுக்க முயற்சி செய்வார்கள். நீங்கள் விழிப்போடு இருக்கவேண்டும். ஒருவன் சொர்க்கத்திற்கு செல்வதற்காக ஆயிரம் ஆண்டுகள் தவம் இருந்தான். ஒரு வினாடி கண் அயர்ந்த நேரத்தில் சொர்க்க வாசல் கதவு திறந்து மூடி விட்டது. எனவே நீங்கள் எல்லோரும் கண்துஞ்சாமல் அயராமல் களப்பணியாற்றுவீர். வெற்றி நம்மை அழைக்கிறது. அனை வரும் ஆயத்தமாக இருங்கள்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




