தமிழக முதல்வர் கருணாநிதி பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல், சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டல் படி மாநில அளவில் சாதிவாரி மக்கள் தொகைக் கணகக்கெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்தவர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து புதன் கிழமையன்ற அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:சமுதாயத்தில் பெரும்பான்மையாக உள்ள மக்கள், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேற வேண்டும்; அதற்கு ஒவ்வொரு ஜாதியினருக்கும் விகிதாச்சார அடிப்படையில் உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பது நீதிக்கட்சியின் கொள்கை.
பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு, அவர்களின் ஜனத்தொகை விகிதாச்சாரப்படி ஒதுக்கீடு செய்யும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கிடைக்க, அரசியல் சட்டத்தையே திருத்த வேண்டும் என்பது பெரியாரின் கொள்கை.
இந்த வழியில் வந்ததாக உரிமை கொண்டாடுகிறவர்கள், யாரும் வற்புறுத்தாமல், யாரும் கோரிக்கை வைக்காமல், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டிருக்க வேண்டும். அப்படி நடைபெறாததால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நான் கேட்கிறேன். ஆனால், இதற்கெல்லாம் தலையாட்டுவதாக இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை, சமூக நீதிக்கோ, நீதிக்கட்சியின் கொள்கைக்கோ எதிரானது என்று சொல்ல முடியுமா?
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு எந்த அடிப்படையில் 50 சதவீத இடஒதுக்கீடு என்பது முடிவு செய்யப்பட்டது? அதற்கான கணக்கு எங்கே? என்று உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.
இதுவரை கணக்கு இல்லாவிட்டால், புதிதாக கணக்கெடுப்பு நடத்தி, அந்த விவரங்களை பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திடம் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு எவ்வளவு வேண்டும் என்பதை பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் முடிவு செய்து தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் தேவைப்பட்டால்,மாநில அரசு இடஒதுக்கீட்டின் அளவை தேவைக்கேற்ப அதிகரித்துக் கொள்ளலாம். அதற்காக புதிய சட்டமும் இயற்றலாம் என்று கடந்த ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சமூக நீதியில் அக்கறையுள்ள எந்த ஒரு அரசும், இந்த அனுமதி கிடைத்த மறுநாளே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டிருக்க வேண்டும்.
புதுச்சேரி மாநில அரசு யாரும் கோரிக்கை வைக்காமலேயே, வரும் நவம்பர் மாதத்துக்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடிக்க ஆணையிட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் புதிதாக இடஒதுக்கீட்டு சட்டத்தை கொண்டு வரப்போவதாகவும் அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், சமூக நீதி கொள்கைக்கு எங்களைத் தவிர வேறு யார் உரிமை கொண்டாட முடியும்? என்று கேட்கும் தமிழக முதல்வர் கருணாநிதி, அகில இந்திய அளவில் முயற்சி நடப்பதால், இங்கே தனியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று கூறியிருக்கிறார். இது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
உச்ச நீதிமன்றம் வழங்கிய அனுமதியின் அடிப்படையில், மாநிலத்துக்கு கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி, மாநிலத்தின் உரிமையை பாதுகாக்க முன்வராமல், பொறுப்பை தட்டிக் கழித்து ஒதுங்கிக் கொள்வது எந்த வகையில் நியாயம்? இது இரட்டை நிலை இல்லையா?
ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என்பதில் மத்திய அரசுக்கு எந்த நிர்பந்தமும் இல்லை. பரிசீலிக்கலாம் என்ற நிலையில்தான் மத்திய அரசு உள்ளது.
ஆனால், தமிழக அரசின் நிலை அப்படி அல்ல. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான கடமையையும், பொறுப்பையும் மாநில அரசின் மீது உச்ச நீதிமன்றம் சுமத்தியிருக்கிறது. ஓராண்டு காலத்துக்குள் கணக்கெடுப்பை செய்து முடிக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த கெடு முடிவதற்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, புதிதாக இடஒதுக்கீடு அளவை முடிவு செய்து, அதற்கான சட்டத்தை கொண்டு வர வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், இப்போது இருக்கும் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கும் ஆபத்து வந்துவிடும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




