அல்காய்தாவுடன் தொடர்பு என்றுகூறி இந்தியர் ஒருவர் உட்பட இருவரை கைது செய்துள்ளது கனடா நாட்டு போலீஸ். இந்தியாவை சேர்ந்த மிஸ்பாஹூதீன் (36), கனடாவில் ஒட்டாவா நகரில் இருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே தொழில்நுட்ப வல்லுனராக வேலை செய்து வந்தார். அவரது நண்பர் அகமது ஈஷன். இவர்கள் இருவரையும் கனடா நாட்டு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள், அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தில் தொடர்பு உள்ளவர்கள் என்றும், ’ஆபரேஷன் சமோசா’ என்ற பெயரில் கனடாவில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் மின்சார டிரான்ஸ்மிட்டர் நிலையங்களை குண்டு வைத்து அழிக்க, கடந்த 2 ஆண்டுகளாக சதி செய்து வந்ததும் தெரிய வந்தது என்றும் கூறி, அவர்களின் வீடுகளில் இருந்து சில கம்ப்யூட்டர்கள், ஒரு வாகனம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள்.
இது குறித்து கனடா நாட்டின் பாதுகாப்பு துறை மந்திரியின் செய்தி தொடர்பாளர், ’’கைதான மிஸ்பாஹூதீன், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்றவர். இந்த சதிக்கு அவர்தான் தலைவராக செயல்பட்டு இருக்கிறார். கனடா நாட்டில் இருந்துதான் அமெரிக்காவுக்கு மின்சாரம் செல்கிறது. இங்கு மின்உற்பத்தி நிலையங்களை அழித்து, அமெரிக்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது இவர்களுடைய குறிக்கோள். கனடா நாட்டில் இருந்து கொண்டே அமெரிக்காவுக்குள் செல்லவும், அங்கும் நாசவேலை செய்யவும் அவர்கள் திட்டமிட்டு இருந்தனர். அதற்குள் அவர்களை கைது செய்து விட்டோம். அவர்களுடன் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகிறோம்’’என்று தெரிவித்துள்ளார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




