லண்டனை சேர்ந்த நியூஸ் ஆப் தி வேர்ல்ட் எனும் இதழ் சூதாட்ட புரோக்கர் மஜீத் என்பவனை தொடர்பு கொண்டு மேட்ச் பிக்சிங்கில் ஈடு பட 150000 பவுண்ட்ஸ் தொகை பேசப் பட்டு பணம் கைமாறிய போது அதை வீடியோ எடுத்து தன் இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டத்தின் முக்கிய நேரங்களில் பாகிஸ்தான் அணியினர் நோ பால் போடுவார்கள் என்று மஜீத் கூறியுள்ளான் லார்ட்ஸ் டெஸ்டில் ஆமிர் 4 நோ பால்களும், ஆசிப் 2 நோ பால்களும் வீசியுள்ளது சந்தேகத்தை மேலும் அதிகமாக்கியுள்ளது. சூதாட்ட புரோக்கர் மஜீத், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் பட் மற்றும் நியூஸ் ஆப் தி வேர்ல்ட் செய்தியாளர் எடுத்துக் கொண்ட புகைப் படத்தையும் தன்னுடைய இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது நியூஸ் ஆப் தி வேர்ல்ட்.
கேப்டன் சல்மான் பட் ,விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல், ஆசிப், ஆமிர் உட்பட 7 பேர் தன்னுடைய கட்டுப் பாட்டில் உள்ளதாகவும் மஜீத் கூறியுள்ளதாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.
இந்த பரபரப்பு குற்ற சாட்டை அடுத்து ஸ்காட்லான்ட் யார்ட் போலீசார் சூதாட்ட புரோக்கர் மஜீத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மஜீத் கைதை தொடர்ந்து பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் பட், வேகப் பந்து வீச்சாளர்கள் முஹம்மது ஆசிப் மற்றும் முஹம்மது ஆமிர், விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல், மேலாளர் யாவர் சயீத் ஆகியோரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்க்சில் இங்கிலாந்து அணி 446 ரன்கள் குவித்தது. தனது இன்னிங்க்சை விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்க்சில் 74 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்க்சை ஆடி வரும் பாகிஸ்தான் அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 41 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து திணறி வருவது குறிப்பிடத் தக்கது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




