

அரசியல் காழ்ப்புணர்ச்சியும் அறியாமையும் தலைவி சொன்ன அவதூறை அப்படியே நம்பியதும் கலந்த கூற்று. இந்தக் கூற்றுக்கு எதிரடியாக ஜெயலலிதாவைக் குறித்து அமைச்சர் பொன்முடி கூறியதை உங்கள் நண்பருக்குச் சொல்லுங்கள்.
அரசியல் அசிங்க லாவணிகளைப் பொருட்படுத்த வேண்டாம்.

சதாம் ஹூசைனின் மறைவுக்கு பின் ஈராக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா? - அமீன், சென்னை
இல்லை. இப்போது இராக்கியர்கள் சதாமின் ஆட்சியை ஏக்கத்துடன் நினைவு கூர்கிறார்கள். இப்போது நடப்பதைப்போல் அவரின் ஆட்சியில் தினமும் குண்டுகள் வெடித்ததில்லை. உணவுப் பஞ்சம் இல்லை. நாட்டை ஆளுவது யார் என்ற குழப்பம் மக்களுக்கு இருந்ததில்லை.
நீதித்துறை இந்தியர்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி செயல்படுவதாக கருதுகிறீர்களா? - அபூஃபைஸல்
நீதித் துறை மீது நம்பிக்கை இழக்க வேண்டாம். இந்தியாவில் நீதி தாமதப்படும் என்பது உண்மையே!
கீழ் நீதிமன்ற நீதிபதிகள் சிலர் அப்படி நடந்து கொண்டாலும் மேல்நீதிமன்றங்கள் பாரபட்சமின்றி நடப்பதாகவே வணங்காமுடியின் நம்பிக்கை.
சீனா இந்தியா மீது போர் தொடுக்குமா? - ராஜா
உங்கள் வினாவில் உண்மை இல்லாமலில்லை. என்றபோதிலும் இப்போது சீனா போர்தொடுக்காது என்றே கூற வேண்டும். இந்தியா மீது சீனாவுக்கு, திபெத், அருணாசலப் பிரதேசம், தலாய்லாமா எனப் பல்வேறு கடுப்புகள் இருந்தாலும், இந்தியா மீது சீனா வன்மத்தோடு இருந்தாலும் உடனடியாகப் போர்தொடுக்காது.
சீனா இப்போது பொருளாதார வல்லரசாக மாறுவதற்காக ஜப்பானுடன் போட்டிபோட்டுக் கொண்டுள்ளது.
மாவோயிஸ்டுகளுக்காக மம்தாவின் 'இரங்கல்' பற்றி? - கீர்த்திவாசன், குறிஞ்சிப்பாடி
தம் மாநிலத்தில் அமைதியை விரும்பும் எதிர்பார்ப்பே தெரிகிறது.

கஷ்டப்பட்டு கவிதை ஒன்று எழுதி அனுப்பினால் 'ற்' க்கு பின்னாடி 'க்' வராது. இங்கே ஒற்று வந்தால் உங்களுக்கு கொட்டு வரும் என்ற ரீதியில் பிழை சுட்டி திருப்பி அனுப்பும் தமிழ் அறிவு ஜீவிகளை பற்றி ...? - வயிரவன், காரைக்குடி
சரியாகத்தான் செய்திருக்கிறார்கள், மொழியை, அதன் அடிப்படையான இலக்கணத்தை அறியாமல் கவிதை என்ன வேண்டிக்கிடக்கிறது.?
அதுவும்"கஷ்டப்பட்டு" வேறு எழுதுவீர்களாம்.
கவிதை என்பது கஷ்டப்பட்டு முக்கி, மினகாமல் தானாக வருவது.
உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளின் தன்னிச்சையான வெளிப்பாடே கவிதை.
Poetry is the spontaneous overflow of powerful feelings: it takes its origin from emotion recollected in tranquility.என்பார் ஆங்கிலக் கவிஞர் WILLIAM WORSWORTH
"உள்ளத்துள்ளது கவிதை" என்றார் கவிமணி தே.வி.
பிழையின்றிச் சிறந்த கவிதைகள் எழுத வேண்டுமானால் கம்பனை, பாரதியை, பாரதிதாசனை, பட்டுக்கோட் டையாரை, வாலியை, கண்ணதாசனைப் படியுங்கள்.
ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா., பசுவய்யா என்ற சுந்தரராமசாமி, தருமு சிவராம் போன்றோரின் கவிதைகளையும் அப்துல்ரகுமான், மீரா, நா,காமராசன். மு.மேத்தா, சி.மணி, புவியரசு, வைரமுத்து போன்றோரின் கவிதைத் தொகுப்புகளைப் படியுங்கள்.

காவித்தீவிரவாதம் (இந்துத்துவா), சிவப்புத் தீவிரவாதம் (மோவோயிஸ்டுகள்) என்றெல்லாம் சொல்லும் காங்கிரஸ் காஷ்மீரில் நடத்துவதை கதர் தீவிரவாதம் என்று சொல்லலாமா? - அப்துல்ரஹ்மான், ஓமான்
கூடாது. கதர் என்பதை இன்றைய மத்திய அரசின் அடையாளமாகச் சுட்டி,"கதர்"த் தீவிரவாதம் என்கிறீர்கள்.
காந்தியின் போராட்டக் கருவிகளுள் கதரும் ஒன்றாகும். ஆனால் இன்றைய ஹைடெக் அரசியலில் காங்கிரஸுக்கும் கதருக்கும் தொடர்பில்லை.
மத்தியில் யார் ஆண்டாலும் காஷ்மீர் மக்களின் கோரிகைக்குச் செவி கொடுக்காதவரை பிரச்சனை தொடரவே செய்யும்.
அரசியல்வாதிகள் யாரும் சாதி ஒழிய வேண்டும் என்று சொல்வதில்லையே? - அபூஅஸீலா, அதிராம்பட்டினம்
சமத்துவபுர மேடைகளில் முழங்குகிறார்களே! உண்மையில் உளப்பூர்வமாகச் சொல்வதில்லை.
ஆனால் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அல்லது தமக்கு அரசியல் நெருக்கடி வரும்போதெல்லாம் சூத்திரன், பார்ப்பனன் ஆயுதத்தை எடுப்பார்கள்.
மூட்டைப் பூச்சி, கொசு போன்றவைகளிலிருந்து இரத்தம் சேகரித்து மனிதனுக்கு செலுத்த முடியுமா? - சிம்மன், சங்கரன்பந்தல்
மனிதனின் இரத்தத்தைத் தவிர வேறு இரத்தத்தை மனிதனுக்குச் செலுத்த முடியாது. அப்படி வாய்ப்பிருந்தால் குரங்குகள்தாம் முதல் பலி. அது இருக்கட்டும்; இப்படி ஓர் அற்புதமான அறிவியல் மேதை சங்கரன்பந்தலில் இருப்பது பக்கத்து வீட்டுக்காரர்களுக்காவது தெரியுமா? :-)
சின்னக்கவுண்டர் திரைப்படத்தில் செந்தில் இதைவிடவும் சிறப்பான வினாக்களை எழுப்புவார்.
| கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் இங்கே க்ளிக்கவும். |

| < முந்தையது | அடுத்தது > |
|---|




