2011ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுகவும் தேமுதிகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டும் என்று வன்னியர் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.வன்னியர் கூட்டமைப்பின் நிர்வாகக் குழு கூட்டம் சென்னை மைலாப்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வன்னியர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சி.என்.ராமூர்த்தி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் இரா.ரமணன், பொருளாளர் நவமணி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீதத்தில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு மூலம் 15 சதவீதம் வழங்கவேண்டும் என்றும் முதல்வராக இருந்தபோது சட்டமன்றத்தில் இடஒதுக்கீடு பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவந்து 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பாதுகாப்பு வழங்கியதற்காக, ஜெயலலிதாவுக்கு வன்னியர் கூட்டமைப்பு, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகமும் இணைந்து அக்டோபர் மாதம் 7ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அங்கத்தில் பாராட்டு விழா நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
தமிழக மக்களைப் பாதுகாக்க தி.மு.க.வுக்கு மாற்றாக அ.தி.மு.க.வை மட்டும்தான் மக்கள் நினைக்கிறார்கள். எனவே விஜயகாந்த் தனது செல்வாக்கை வீணடிக்காமல் மக்கள் விரும்பும் கட்சியான அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரவேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




