தர்மபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தில் கோகிலவாணி, காயத்திரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உடல் கருகி பரிதாபமாக இறந்த வழக்கில், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை இன்று வழங்கியது. வழக்கில் சம்பந்தப்பட்ட முனியப்பன், நெடுஞ்செழியன், ரவீந்திரன் ஆகிய 3 முக்கிய குற்றவாளிகளுக்கும் வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பு குறித்து ஹேமலதாவின் தாயார் காசியம்மாள் கூறுகையில், வழக்கின் தீர்ப்பு தாமதமாக வந்தாலும் நான் சந்தோஷம் அடைகிறேன். என்னைப் போல பெற்றோர்கள் இனி இதுபோன்ற சம்பவங்களை சந்திக்க கூடாது. இந்த தண்டனையை நிறைவேற்றினால் ஓரளவாது இனி குற்றங்கள் குறையும்.
ஹேமலதாவின் உறவினர் சந்திரசேகர் கூறுகையில், காயப்பட்ட மனதுக்கு சிறிய ஆறுதலான விஷயம்தான் இந்த தீர்ப்பு. எதிர்காலத்தில் எந்த குழந்தைகளுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது என்றார்.
காயத்திரியின் தந்தை வெங்கடேஷ் கூறுகையில், இன்று காலையில் இருந்தே பதட்டத்துடனும், வேதனையுடனும் இருந்தோம். இந்த தீர்ப்பு மனநிறைவை அளிக்கிறது. இது சரியான தீர்ப்பு. சேலத்தில் கொடுத்த தீர்ப்பு நிலைநாட்டப்பட வேண்டும் என்று நினைத்தோம். அதன்படி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளதும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வழக்குக்காக உழைத்த வழக்கறிஞர்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் எங்களின் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




