புதுவை: புதுவையில் நடைபெறவுள்ள மருத்துவப் படிப்புக்கான சென்டாக் கவுன்சலிங்கில் முஸ்லிம் மற்றும் மீனவ மாணவர்களுக்கு அரசு அறிவித்த 2 % உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்று சென்டாக் கன்வீனர் பிருத்திவிராஜ் தெரிவித்துள்ளார்.
புதுவை முஸ்லிம் மற்றும் மீனவர்களுக்கு 2 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் வி.வைத்திலிங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்தார். அரசு ஆணை வெளியிடப்படாத நிலையில், முதல்வர் அறிவிப்பை திங்கள்கிழமை நடைபெறும் சென்டாக் கவுன்சலிங்கில் அமல்படுத்த வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியினர் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இது குறித்து சென்டாக் கன்வீனர் பிருத்திவிராஜை கேட்டபோது முஸ்லிம் மற்றும் மீனவர்களுக்கு 2% உள் ஒதுக்கீடு வழங்குமாறு அரசிமிருந்து சென்டாக்குக்கு உத்தரவு வந்துள்ளது. அதனால் அவர்களுக்கு 2 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்றார். புதுச்சேரி அரசு, பிராந்திய ஒதுக்கீட்டின்படி, புதுச்சேரி மாணவர்களுக்கு 75 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்தது.
இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில் புதுச்சேரி மாணவர்களுக்கான 75% இட ஒதுக்கீட்டை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில் பிராந்திய ஒதுக்கீட்டு அரசாணையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு மட்டுமே இந்த ஆணை பொருந்தும் என கூறப்பட்டுள்ளதை மக்கள் உரிமை கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக் காட்டியது.
எனவே தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு பிராந்திய இடஒதுக்கீடு பொருந்தாது என்று சென்டாக் வட்டார செய்திகுறிப்பு தெரிவிக்கின்றது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




