கொழும்பு: இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காகவும், கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காகவும், மறு வாழ்வுப் பணிகளை ஆய்வு செய்வதற்காக இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ், மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். நேற்று வவுனியாவுக்கு சென்ற நிருபமா, செட்டிகுளம் மெனிக் பார்ம் முகாமுக்கு காரில் சென்றார்.
அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டார். அந்த முகாமில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை நிருபமாராவ் சந்தித்து பேசினார். முகாமில் உள்ள வசதிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத்தரம் குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர், இலங்கைத் தமிழர்களுக்காக, முடிந்த அளவு அனைத்து உதவிகளையும் செய்ய, இந்தியா தயாராக உள்ளது என, உறுதி அளித்தார்.
பின்னர், வவுனியாவுக்கான அரசு ஏஜெண்டை நிரூபமாராவ் சந்தித்துப் பேசினார். தமிழர் பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியையும் அவர் பார்வையிட்டார்.
கிளிநொச்சிக்கு சென்ற நிருபமாராவ், அங்கு மறுகுடியமர்த்தப்பட்டு உள்ள தமிழர்களை சந்தித்து பேசினார். அவர்களுக்கு, உபகரணங்கள், சிமெண்ட் மூட்டைகள், மேற்கூரை ஷீட்கள் ஆகியவற்றை வழங்கினார். ஓமந்தையிலும் அவர் உபகரணங்கள் வழங்கினார். பின்னர், நிருபமாராவ், யாழ்ப்பாணத்துக்கு சென்றார். பொதுநல அமைப்புகளின் தலைவர்களை சந்தித்த அவர், போருக்கு பிந்தைய நிலவரத்தை கேட்டறிந்தார். சவால்களை சமாளிக்க இலங்கை அரசுடன் இந்தியா துணைநிற்கும் என்று கூறினார்.
யாழ்ப்பாணத்தில், விடுதலைப்புலிகளால் கட்டப்பட்ட 3 பதுங்கு குழிகளையும் நிருபமாராவ் பார்த்தார். பின்னர், வவுனியாவில் உள்ள அரசு அதிகாரிகளுடனும், நிருபமா ராவ் ஆலோசனை நடத்தினார். கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




