வாஷிங்டன்: கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க படைகள் ஈராக்கில் தாக்குதலை நடத்த தொடங்கின. ராக்கில் உள்ள அமெரிக்கப் படைகளை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததால், அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றபின், ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் அனைத்தும், 2010 ஆகஸ்ட் 31க்குள் முழுமையாக வாபஸ் பெறப்படும் என அறிவித்தார்.
இதன்படி, ஈராக்கிலிருந்த அமெரிக்க படைகள் படிப்படியாக வெளியேறின. இந்நிலையில் ஈராக்கில் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக ஒபாமா அறிவித்துள்ளார். அமெரிக்க பொருளாதாரத்தை சீர்படுத்தி வேலையின்றி தவிக்கும் லட்சக்கணக்கானோருக்கு மீண்டும் வேலை வழங்குவதே எனது பணி என்று கூறியுள்ளார்.
மேலும் ஒபாமா கூறியுள்ளதாவது, ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் திரும்ப பெறப்படும் என நான் ஏற்கனவே அறிவித்திருந்தேன். அதை இப்போது நிறைவேற்றியுள்ளேன். நாங்களே சுமார் ஒரு லட்சம் வீரர்கள் ஈராக்கில் இருந்து திரும்ப பெற்றுள்ளோம். மேலும் அங்கு நிறுவப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான முகாம்களும் மூடப்பட்டுள்ளன. போர் தளவாடங்களும் ஈராக்கில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது.
ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப்பெறும் முடிவு ஈராக்கின் நலன் கருதி மட்டும் எடுக்கப்படவில்லை அமெரிக்காவின் நலன் கருதியும் எடுக்கப்பட்டது. ஈராக்கின் எதிர்காலத்தை வலுப்படுத்தி ஒரு ஸ்திரமான அரசாக அதை அதன் மக்கள் கைகளில் ஒப்படைக்க அமெரிக்க விலைமதிக்கமுடியாத தியாகத்தை செய்துள்ளது.
அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி நிலவிய காலத்திலும் ஈராக்கில் அமைதியை நிலைநாட்ட பெரிய அளவில் செலவழிக்கப்பட்டது. அமெரிக்காவின் இளைஞர்களும், இளம் பெண்களும், ஈராக்கில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். போரினால் பாதிக்கப்பட்ட ஈராக்கில், ஒரு மறுமலர்ச்சி ஏற்படும் என்ற நம்பிக்கையில் தான் அமெரிக்கா ஈராக்குக்கு இவ்வளவு காலம் துணை நின்றது என்று ஒபாமா கூறியுள்ளார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




