தன் இரு பெண் குழந்தைகளைத் தனியே விட்டுவிட்டு வெளிநாடு செல்ல முயன்ற பெண்ணுக்கு பத்தரமுல்ல நீதிமன்ற நீதிபதி துலானி அமரசிங்ஹ நேற்று தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேற்படி சிறுமியர் இருவரின் தந்தை பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இடம்பெற்ற ஒரு வழக்கிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
6 மற்றும் 9 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகளை வீட்டில் தனியே விட்டுவிட்டு தன் மனைவி வெளிநாடு செல்வதைத் தடுத்து நிறுத்துமாறு கேட்டு, கடந்த ஆகஸ்டு மாதம் 2 ஆம் திகதி குழந்தைகளின் தந்தை செய்த முறைப்பாட்டை விசாரணை செய்த பொலிஸ் நிலையப் பொறுப்பாளர் புத்திக்க பாலச்சந்திர , இப் பெண்மணி இதற்கு முன்னரும் பிள்ளைகளைத் தனியே விட்டு வெளிநாடு சென்று வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
குற்றஞ்சாட்டப்பட்ட பெண்மணியின் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி ஹேமபால ஏக்கநாயக்க, தம்முடைய கட்சிக்காரர் கணவரைப் பிரிந்து வாழ்பவர் என்றும், குழந்தைகளின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டே அவர் வெளிநாடு சென்றுள்ளார். அப்படிச் சென்றிருந்த வேளையில், குழந்தைகளுக்குத் தேவையான பணம், உணவு, ஆடையணிகள் முதலான அனைத்தையும் குறைவின்றி வழங்கிவந்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்.
மேற்படி வழக்கை விசாரித்த நீதிபதி செல்வி துலானி அமரசிங்ஹ, பெற்றோரின் அன்பையும் அரவணைப்பையும் பெற்றுக்கொள்ளும் உரிமை குறித்து ஐ.நா.சாசனத்தின் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான ஷரத்துக்கள் மிகத்தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன என்பதை வலியுறுத்தினார். இந்த வழக்கில்சம்பந்தப்பட்ட சிறுமியர் இருவரும் பெற்றோரின் பாதுகாப்பில் இருக்கவேண்டிய பருவத்தினர் என்றும், அவர்களின் சகல நலன்களையும் பேணுவதில் பெற்றோர் அதிகக் கவனமெடுக்க வேண்டியது இன்றியமையாதது என்றும் சுட்டிக்காட்டினார்.
குற்றம் சுமத்தப்பட்டுள்ள பெண்மணி தனது குழந்தைகளுக்குத் தேவையான வாழ்க்கை வசதிகளைப் பெற்றுக் கொடுக்குமுகமாகவே வெளிநாடு செல்ல முயன்றார் என்பது உண்மையாயினும், குழந்தைகளின் பராமரிப்புச் செலவை வழங்குவதற்குத் தன்னால் முடியும் என்று அக்குழந்தைகளின் தந்தை உறுதியளித்துள்ளதாலும், தாயின் பிரிவினால் அக்குழந்தைகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை மருத்துவப் பரிசோதனைகளால் தெரிய வந்துள்ளதாலும் அப்பெண்மணி வெளிநாடு செல்வதற்குத் தாம் தடையுத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
மேலும், இத்தீர்ப்பினை இலங்கையின் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களம், கட்டுநாயக்கா விமான நிலையம் என்பனவற்றுக்கு அறியத்தருமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




