விமான பணிப்பெண்ணை கேலி செய்த பாக்கிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகளை அமெரிக்க காவல்துறையினர் தடுத்து வைத்து கடுமையாக விசாரணை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்பயுத்தியுள்ளது.
பாக்கிஸ்தான் இராணுவ ஆலோசனைக் குழுவின் வருடாந்திர மாநாடு அமெரிக்காவில் நடைபெறுவதையொட்டி அதில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் 9 பேர் கொண்ட குழு அமெரிக்கா சென்றது.
இக்குழுவினர் வாஷிங்டனிலுள்ள டல்லாஸ் விமான நிலையத்திலிருந்து தம்பா செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். அப்போது அந்த இராணுவ அதிகாரிகளில் ஒருவர், விமான சிப்பந்தியை பார்த்து, "அநேகமாக நான் பயணம் செய்யும் கடைசி விமானப்பயணம் இதுவாகத்தான் இருக்கும்" என்று கேலியாகக் கூறியதால் ஆத்திரமடைந்த பணிப்பெண்கள் விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து விமானத்தில் இருந்து 9 பேரும் இறக்கி விடப்பட்டனர். இரண்டரை மணி நேரம் தடுத்து சிறை வைக்கப்பட்டு காவல்துறையினர் கடுமையாக விசாரணை நடத்தினர். தொலைபேசியில் அவர்கள் யாரையும் தொடர்புகொண்டு பேசவும் அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் அமெரிக்க அதிகாரிகள் தங்களை மோசமாக நடத்தியதாக இஸ்லாமாபாத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதனால் கோபமுற்ற பாக்கிஸ்தான் இராணுவ தலைமை,உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவிட்டதையடுத்து அவர்கள் 9 பேரும் நாடு திரும்பினர்.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து அமெரிக்க இராணுவ தலைமையிடம் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து நடந்த சம்பவத்திற்காக,அமெரிக்க ராணுவ தலைமையகமான 'பென்டகன்' வருத்தம் தெரிவித்துள்ளதாக பாக்கிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




