பாஸ்டன்: வரும் 2015 ஆம் ஆண்டில், இந்தியாவில் இணையதளப் பயன்பாடு, தற்போதைய எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகரிக்கும் என, அமெரிக்க ஆய்வு ஒன்று கூறுகிறது.
அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகர் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில், இந்தியாவில் இப்போது 8.10 கோடி பேர் இணையதளத்தை உபயோகிக்கின்றனர். இந்த எண்ணிக்கை 2015 ம் ஆண்டில் 23.70 கோடியாக உயரும் என்றும் இணையதள உபயோகிப்பாளர் எண்ணிக்கை நூறு கோடி என்ற ரீதியில் நடத்தப்பட்ட ஆய்வில் பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் 2015 ம் ஆண்டில் இணையதளத்தை உபயோகிப்போர் எண்ணிக்கை 120 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஜப்பானில் உள்ள இணையதள உபயோகிப்பாளர் எண்ணிக்கையைக் காட்டிலும் இது அதிகமாகும். 2009ம் ஆண்டில் பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் இணையதள உபயோகிப்போர் எண்ணிக்கை 6.10 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2009ம் ஆண்டில் இந்த நாடுகளில் இணையதள உபயோகிப்போர் எண்ணிக்கை 20 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும் 2015 ம் ஆண்டில் இது 19 சதவீத அளவுக்கு உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கணினி உபயோகிப்போர் குறைவாக உள்ள நிலையில், செல்போன் மூலம் இணையதளத்தை பயன்படுத்துவோரை அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

| < முந்தையது | அடுத்தது > |
|---|




