லண்டன்: பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மீது ஷூ மற்றும் முட்டை வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டோனி பிளேர் பிரிட்டன் பிரதமராக இருந்தபோது, ஈராக் போருக்கு ஆதரவளித்தது தொடர்பாக தாம் மேற்கொண்ட முடிவுகளுக்கு நியாயம் கற்பித்தும், மேலும் பல நிகழ்வுகளையும் தொகுத்து ‘எனது பயணம்’ - My journey - என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.
பிரிட்டனில் இந்த புத்தகத்தை பிரபலப்படுத்துவதற்காக பல இடங்களுக்கு சென்று அங்கு ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தமது புத்தகத்தை பிரபலப்படுத்தி வருகிறார் இதன் ஒரு பகுதியாக டப்ளின் நகருக்கு இன்று சென்றார். அவர் அங்கு வருவதை அறிந்து, ஈராக் போரில் ஆதரவளித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிளேர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.
கைகளில் ரத்தக் கறையுடன் வரும் பிளேரே திரும்பி போ! என்று அவர்கள் முழக்கமிட்டுக் கொண்டிருக்கும்போது, டோனி பிளேர் காரில் வந்திறங்கினார். அவர் காரிலிருந்து இறங்கியதுமே அங்கு திரண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், பிளேர் மீது ஷூ மற்றும் முட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வீசினர். இருப்பினும் அவை பிளேர் மீது படவில்லை. பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பத்திரமாக நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கத்திற்கு அழைத்துச் சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே தனியார் தொலைகாட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள பிளேர், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான படையெடுப்புதான், இஸ்லாமிய அடிப்படைவாதம் அதிகரிக்க காரணமாக அமைந்துவிட்டதாக கூறப்படுவதை நிராகரித்து பேட்டியளித்துள்ளார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




