பீகார் மாநிலம் லகிசாரை காட்டுப்பகுதியில் கடந்த 29-ம் தேதி பீகார் போலீசார் மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது மாவோயிஸ்டுகள் போலீசார் மீது திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 7 போலீசார் கொல்லப்பட்டனர். 11 பேர் காயம் அடைந்தனர். 4 போலீசாரை கடத்தி சென்றனர்.
அவர்கள் 4 பேரையும் விடுவிக்க வேண்டுமானால் சிறையில் இருக்கும் தங்கள் இயக்கத்தை சேர்ந்த 8 பேரை விடுவிக்க வேண்டும் இல்லை என்றால் 4 பேரையும் சுட்டுக் கொல்வோம் என்று மாவோயிஸ்டுகள் மிரட்டல் விடுத்தனர். ஆனால் பீகார் அரசு அவர்கள் கோரிக்கையை ஏற்கவில்லை. இதனால் லுகாஸ்தே என்ற சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்றனர்.
மேலும் அவர்கள் பிடியில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் அபய் பிரசாத்யாதவ், போலீஸ்காரர்கள் ருமேஷ்குமார், முகமது இஷான் ஆகியோரையும் கொல்லப்போவதாக மிரட்டி வந்தனர். இதையடுத்து முதல்வர் நிதிஷ்குமார் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். மாவோயிஸ்டுகளை பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த வேண்டுகோளை மாவோயிஸ்டுகள் ஏற்க மறுத்து விட்டனர்.
ஆனால் போலீஸ்காரர்களின் குடும்ப சூழ்நிலை கருதி 3 பேரையும் விடுவிக்க போவதாக மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர். அவர்களை அரசிடம் ஒப்படைக்கமாட்டோம் போலீஸ்காரர்களிடமே ஒப்படைப்போம் என்றும் கூறினார்கள். இந்த நிலையில் உள்ளூர் டி.வி சானல் ஒன்றுக்கு மாவோயிஸ்டு தரப்பில் இருந்து இன்று காலை தொடர்பு கொண்டு பேசினார்கள். தன்னை மாவோயிஸ்டு தலைவர் டென்ஜி என்று கூறிய அவர் 3 போலீசாரையும் விடுவித்து விட்டதாக கூறினார்.
சப்-இன்ஸ்பெக்டர் அபய் பிரசாத் யாதவின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இன்று அதிகாலை எங்களை சந்தித்தார்கள். அவர்களிடம் 3 பேரையும் ஒப்படைத்து விட்டோம் என்று அவர் தெரிவித்தார். ஆனாலும் 3 பேரும் இன்று ஊருக்கு திரும்பவில்லை. எனவே அவர்கள் விடுதலை ஆகிவிட்டார்களா? என்று உறுதியாக தெரியவில்லை.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




