திட்டக்குடி: பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டக்குடியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ’’இலவசங்களை வழங்குவது மூலம் உண்மையான வளர்ச்சி அடைய முடியாது. எம்.ஜி.ஆர். ஆட்சியின் போது இலவச காலனி, இலவச பல்பொடி என்ற சில திட்டங்களை மட்டும் செயல்படுத்தினார்.
1989-ல் தமிழ்நாட்டில் கருணாநிதி 3-வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற போது கூறிய கருத்தில் இலவசங்கள் என்பது தற்காலிகமாகத்தான் இருக்க முடியும். அது நீடித்தால் சமுதாயத்துக்கு தீங்குதான் ஏற்படும்.
உண்மையான முன்னேற்றம் என்பது மக்கள் தாங்களுக்கு தாங்களே தேவையானவற்றை வாங்கி கொள்ளக்கூடிய முறையில் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்வதுதான் என அப்போது கூறினார். இதனை நான் கூறும்போது கருணாநிதிக்கு கோபம் வருகிறது. அவர் 1989-ல் சொன்னதைத்தான் தற்போது நான் திருப்பி சொல்கிறேன்.
இலவச டெலிவிஷன் கொடுப்பதால் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இலவச பொருட்கள் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் இலவச கழிவறை கட்டி தர வேண்டும். விவசாயிகளுக்கு 25 ஆயிரம் பணமாக கொடுக்க வேண்டும். தற்போது விவசாய விளைநிலங்களை வெளிமாநிலத்தவர்கள் கைப்பற்றி வீட்டுமனை நிலங்களாக மாற்றி வருவது விவசாயத்தை அழித்துவிடும். இதனை தடுத்து நிறுத்த உரிய சட்டம் கொண்டுவர வேண்டும். இல்லையெனில் 5 ஆண்டுகளில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு உணவுக்கு அடுத்த மாநிலத்தை எதிர்பார்க்கும்நிலை உருவாகும்’’ என்று தெரிவித்தார்.
அவர் மேலும், ‘’நாங்கள் தனித்து நிற்பது மூலம் வேறு கட்சிகள் ஆட்சிக்கு வருவதை வழிவகுப்பதாக கூறமுடியாது. இருப்பினும் தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி அறிவிப்போம்’’ என்று தெரிவித்தார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




