வேலூர்: ஜோலார்பேட்டை கோடியூரில் வசிப்பவர் ஆசிரியர் ரவிபதி. இவரது மனைவி ரேவதி மட்டும் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ஒரிசாவை சேர்ந்த 3 ஆசாமிகள், அங்கு சென்று ரேவதியிடம் பழைய நகைகளுக்கு பாலிஷ் போட்டு புதிதாக்கி தருவதாக கூறினர்.
இதனை நம்பிய ரேவதி, இரண்டரை சவரன் செயினை கழற்றி கொடுத்துள்ளார். பாலிஷ் போடுவது போல் நடித்த அந்த கும்பல், ரேவதியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். அந்த நேரத்தில் 3 பேரும் நகையை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டனர். பின்னர் திரும்பி வந்து ரேவதி பார்த்தபோது, 3 பேரையும் காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்தார். ரவிபதி தனது நண்பர்களுடன் சேர்ந்து, ஆட்டோவில் பல்வேறு இடங்களுக்கு சென்று தேடினார்.
அப்போது நகைகளுக்கு பாலிஷ் போடும் ஒரிசா ஆசாமிகள் ஏராளமானோர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் இருப்பது ரவிபதிக்கு தெரியவந்தது. இதையடுத்து இன்று காலை தனது மனைவி மற்றும் நண்பர்களுடன், ஊத்தங்கரைபகுதிக்கு சென்றார். அப்போது ஊத்தங்கரை கல்லாவி ரோட்டில் நின்றிருந்த ஒரிசா ஆசாமியை பார்த்து ரேவதி திடுக்கிட்டார். இவன்தான் நகையை அபேஸ் செய்ததாக கூறி அடையாளம் காட்டினார். ஆத்திரமடைந்த ரவிபதி தனதுநண்பர்களுடன் சேர்ந்து, அந்த ஆசாமியை விரட்டி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அவனை தப்பியோடி விட்டான்.
பின்னர் சாம்பல்பட்டி மற்றும் ஊத்தங்கரைக்கு அவர்கள் சென்றனர். அங்கு பாலிஷ்போட்டு வரும் 3 பேரை பிடித்து, ஆட்டோவில் ஏற்றிச்சென்றனர். பின்னர் அவர்களை வேலூர் மாவட்டம் ஜோலார்போட்டை காவல்துறையில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் ஊத்தங்கரைபகுதியில் தங்கியிருந்து வேறு மாவட்டங்களுக்கு சென்று ஏராளமானோரை இதுபோல்ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. விசாரணையில், மோசடி கும்பல் மேலும் பலர் சிக்குவார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




