சென்னை: கடந்த 2009-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் தி.மு.க. சார்பில் மு.க. அழகிரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பி. மோகனும் போட்டியிட்டனர். இதில் அழகிரி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை எதிர்த்து பி. மோகன் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் அவர் கடந்த 30.10.09-ம் தேதி காலமானார். அதனால், அந்த வழக்கு முடிவு பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மோகன் இறந்ததையடுத்து, அழகிரிக்கு எதிரான வழக்கை நடத்துவதற்கு, மோகனுக்கு பதிலாக தன்னை அனுமதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஏ.லாசர் நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த வழக்கில் அழகிரியின் வழக்கறிஞர் ஆஜராகி, லாசர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுவிட்டார். அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. அதனால், அழகிரியின் வெற்றியை எதிர்த்து வழக்காட லாசருக்குத் தகுதியில்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி தனபாலன் இது குறித்து அளித்த தீர்ப்பில்: மோகனுக்கு பதிலாக தன்னை வழக்காட அனுமதிக்க வேண்டும் என்று லாசர் சட்டத்துக்குட்பட்டு மனு செய்துள்ளார். தேர்தலை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டவுடன், அது வாதி, பிரதிவாதி ஆகியோருக்கு இடையேயானவைதான் என்று அர்த்தம் ஆகாது.
அந்த வழக்கின் மூலம் அந்தத் தொகுதி முழுவதும் அந்த வழக்குக்கு தொடர்புடையதாக ஆகிறது. இது பற்றி மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 112 கூறப்பட்டுள்ளது. எனவே, அவர் ரூ.2,000 டெபாசிட் செலுத்தி, தேர்தல் வழக்கைத் தொடர்ந்து நடத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




