நாடு முழுவதும் வங்கி மற்றும் இன்சூரன்ஸ் ஊழியர்களின் முழுஅடைப்புப் போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இதனால், தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது, புதிய ஓய்வூதியத்திட்டத்தை திரும்பப்பெறவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 8 தேசிய தொழிற்சங்கங்கள் இன்று நடைபெறும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
இதில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் பணியைச் சேர்ந்த ஊழியர்களும் பங்கேற்றுள்ளனர். இதனால் வங்கி சேவைகள் மற்றும் ஏடிஎம் மையங்களின் செயல்பாடு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, வேலை நிறுத்தத்தின் போது வன்முறையில் ஈடுபடுவோர் மற்றும் பணிக்குச் செல்பவர்களை தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் நடைபெறும் இந்த பொது வேலை நிறுத்தத்திற்கு தமிழகத்தில் பெரிய ஆதரவு கிடைக்கவில்லை. சென்னையில் இன்று காலை முதல் பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கிவருகின்றன. கடைகளும் வழக்கம்போல் திறக்கப்பட்டுள்ளன. மதுரை, நெல்லை, உள்ளிட்ட தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதனிடையே, மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் முழுஅடைப்புப் போராட்டத்தினால் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது

| < முந்தையது | அடுத்தது > |
|---|




