மும்பை : இந்தோசோலார் நிறுவனம், சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் சாதனங்கள் (ஃபோட்டோ வோல்டாயிக் செல்கள்) தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் இம்மாதம் 13-ந் தேதி பங்கு வெளியீட்டில் களம் இறங்குகிறது. இதன் வாயிலாக ரூ.357 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.
இந்தோசோலார் நிறுவனம், ஏற்கனவே இரண்டு உற்பத்திப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவ்விரண்டு பிரிவுகளுமாக, ஆண்டுக்கு, 160 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில், மின் சாதனங்களை தயாரிக்கும் திறன் கொண்டவையாகும். இந்நிலையில் 100 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய சாதனங்கள் தயாரிக்கும் வகையில் மூன்றாவது உற்பத்திப் பிரிவை அமைக்க திட்டமிட்டுள்ளது. இத்தொழிற்சாலை அடுத்த ஓராண்டில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தேவையான பகுதி நிதியை திரட்டிக் கொள்ளும் வகையில் பங்கு வெளியீட்டை மேற்கொள்வதாக இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எச்.ஆர்.குப்தா தெரிவித்தார்.
இந்தோசோலார் நிறுவனத்தில், அதன் நிறுவனர்கள் தற்போது 97.5 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளனர். இது, பங்கு வெளியீட்டுக்குப் பிறகு 63 சதவீதமாக குறைந்து விடும். புக் பில்டிங் எனப்படும் ஏல அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ள இப்பங்கு வெளியீடடில், இந்நிறுவனப் பங்கு ஒன்றின் விலை ரூ.29-32 என அறிவிக்கப்பட்டுள்ளது. பங்குகள் வேண்டி விண்ணப்பிக்கும் முதலீட்டாளர்கள் குறிப்பிடும் விலையின் அடிப்படையில் ஒரு பங்கின் இறுதி விலை பின்னர் நிர்ணயம் செய்யப்படும்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




