சென்னை: சென்னை புறநகர் பகுதியான தாம்பரத்தில் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலை வைக்க வழங்கிய அனுமதியை திடீரென காவல்துறையினர் மறுத்ததால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
தாம்பரத்தை அடுத்த காமராஜர்புரம் வேளச்சேரி சாலை, புத்தர் தெரு சந்திப்பில் விநாயகர் சிலை வைக்க, இந்து முன்னணியினர் கடந்த 4ம் தேதி முடிவு செய்தனர். அதற்காக சேலையூர் காவல்நிலையத்தில் அனுமதி பெற்றனர். இந்நிலையில் விநாயகர் சிலையை தயார் செய்து, பாஜக மற்றும் இந்து முன்னணியினர் மினி லாரியில் நேற்று எடுத்து வந்தனர். அப்போது, அங்கு வந்த சேலையூர் காவல்துறையினர் ‘இந்த வழியாகத்தான் கிறிஸ்தவர்கள் ஆலயத்துக்கும் முஸ்லிம்கள் தொழுகைக்கும் செல்வார்கள். இங்கு சிலை வைத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் இங்கு சிலை வைக்க அனுமதிக்க மாட்டோம் என்றனர்.
இதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று காலையிலும் இந்த பிரச்னை நீடித்தது. இதனால் ஏராளமான காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் ரவீந்திரன், பொது செயலாளர் பரமேஸ்வரன், பாஜ தேசிய பொதுக்குழு உறுப்பினர் வேதசுப்பிரமணியம், செம்பாக்கம் பேரூராட்சி தலைவர் ஏ.ஆர்.டி.லோகநாதன் உட்பட ஏராளமானோர் குவிந்தனர். ‘சிலை வைக்க அனுமதி கோரும் போதே மறுத்திருக்கலாம். இப்போது அனைத்து ஏற்பாடுகளையும் செய்த பின், திடீரென தடை விதிப்பது எந்த வகையில் நியாயம்? என அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின் காவல்துறையினர் மாற்று இடம் குறித்து இந்து அமைப்பினருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து தாம்பரம் அடுத்த காமராஜர்புரம் பஸ் நிலையம் அருகே சிலை வைக்க மாற்று இடம் வழங்கப்பட்டதை தொடர்ந்து அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




