பாட்னா: பாட்னாவில் நடைபெற்ற ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சிக் கூட்டத்தில் பேசிய அக்கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், சமூகத்தில் பரவியுள்ள நோய்களுக்கு காங்கிரஸ் கட்சி தான் பொறுப்பேற்க வேண்டும். மத்திய அரசில், சிறுபான்மையினரும், இளைஞர்களும் அதிகாரத்தில் இல்லை. எனவே, அவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும். காங்கிரசும், பா.ஜ.,வும் ரகசியமாக இணைந்து செயல்படுகின்றன.
வரும் தேர்தலில், காங்கிரசுக்கும், பா.ஜ.,வுக்கும் மக்கள் ஓட்டளிக்க மாட்டார்கள். ராஷ்டிரிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பீகாரில், காங்கிரஸ் கட்சி தேய்ந்து வருகிறது. விரைவில், அக்கட்சி அரசியலில் இருந்து காணாமல் போய் விடும்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் காங்கிரசும், பா.ஜ.,வும் இணைந்து செயல்படுகின்றன. ஆனால், அம்மசோதாவில் தற்போது உள்ள நிலையை நாங்கள் எதிர்க்கிறோம். அந்த மசோதாவில், முஸ்லிம்கள் மற்றும் பிற்பட்ட சமுதாயத்தினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




