உலகம் முழுவதும் உள்ள மக்களில் எத்தனை சதவீதம் பேர் பட்டினியால் வாடுபவர்கள் என்று ஐ.நா. திட்டக்குழு சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி கணக்கெடுப்பு தகவல்கள் நேற்று வெளியிடப்பட்டன.
உலகில் பசியால் வாடுபவர்கள் 50 சதவீதம் பேர் இந்தியர்கள் என்று அந்த கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது. உலகில் பட்டினியால் தவிக்கும் இருவரில் ஒருவர் இந்தியர் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது. அது போல இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு உரிய ஊட்டசத்து கிடைப்பது இல்லை. இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை சரியான உணவு கிடைக்காமல் வளர்வதாக சர்வேயில் தெரிய வந்துள்ளது.
இந்தியா அறிவியல், மருத்துவத்துறைகளில் வளர்ந்து விட்டதாக கூறுகின்ற போதிலும் சுகாதாரம் முழுமையாக இல்லை என்று ஐ.நா. கணக்கெடுப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பிரசவத்தின் போது உயிரிழக்கும் பெண்கள் விகிதம் கவலை அளிப்பதாக உள்ளது என்றும் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
கர்ப்ப காலத்தில் குழந்தைபெறும் போது லட்சத்தில் 254 பெண்கள் உயிரிழப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், உத்தராஞ்சல் மாநிலங்களில் அதிக பெண்கள் உயிரிழப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




