கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்ற பாரதீய ஜனதா கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் 11 பேருக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீசு அனுப்பி உள்ளார்.கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாரதீய ஜனதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக அக்கட்சியைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்களும், 5 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் அறிவித்தனர். இவர்களில் 7 பேர் அமைச்சர்கள். (3 பேர் பாரதீய ஜனதாவை சேர்ந்தவர்கள். 4 பேர் சுயேச்சைகள்). இந்த அதிருப்தி கோஷ்டியினருடன் நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததால் 7 மந்திரிகளில் 6 பேரை எடியூரப்பா அமைச்சரவையில் இருந்து நீக்கினார்.
19 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, சட்டசபையில் வருகிற 12ஆம் தேதிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு எடிïரப்பாவுக்கு கர்நாடக ஆளுநர் பரத்வாஜ் `கெடு' விதித்தார். அதை ஏற்று 11ஆம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர எடியூரப்பா முடிவு செய்துள்ளார்.
இதற்கிடையே, சென்னையில் தங்கி இருந்த அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் கேரள மாநிலம் கொச்சி சென்று பின்னர் அங்கிருந்து மும்பை வழியாக கோவா போய் பனாஜி அருகே பெனாலிம் என்ற இடத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருக்கிறார்கள். அங்கு தற்போது 9 பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்களும் 4 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.
அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்களை அரசுக்கு ஆதரவாக திருப்பும் முயற்சியில் பாரதீய ஜனதா தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். இதன் பலனாக அதிருப்தி கோஷ்டியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டு மீண்டும் ஆதரவு அளிப்பதாக நேற்று முன்தினம் அறிவித்தனர்.
கோவாவில் தங்கி இருக்கும் அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்களை அந்த மாநில முன்னாள் முதல்வரும் தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான பாஜகவைச் சேர்ந்த மனோகர் பாரிக்கர் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்; கர்நாடக பாரதீய ஜனதா அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு சனிக்கிழமைக்குள் தீர்வு காணப்படும் என்றார்.
இதேபோல் அதிருப்தி கோஷ்டியின் தலைவரான கலால் வரித்துறை அமைச்சர் ரேணுகாச்சார்யாவும், பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும், கர்நாடக பாரதீய ஜனதா அரசுக்கு ஆபத்து இல்லை என்றும் செய்தியாளர்களிடம் கூறினார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் பாரதீய ஜனதா அரசை ஆதரிக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
கர்நாடக மந்திரி ஜனார்த்தன ரெட்டியும் கோவா சென்று அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசினார்.
இந்நிலையில், அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் பாரதீய ஜனதாவுக்கு திரும்பி விடாமல் தடுக்கும் முயற்சியில் ஜனதாதளம் (எஸ்) கட்சி ஈடுபட்டு உள்ளது. இதற்காக கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தலைவருமான குமாரசாமி நேற்று முன்தினம் இரவு கோவா சென்றார். அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருக்கும் ஓட்டலில் அவரும் தங்கி இருக்கிறார். ஓட்டலுக்கு சென்ற குமாரசாமியுடன் கோவா மாநில மந்திரிகள் இருவர் உள்பட கோவா காங்கிரஸ் தலைவர்கள் சிலரும் சென்றனர்.
அதிருப்தி கோஷ்டி எம்.எல்..ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க குமாரசாமி அங்கு சென்றதாக கூறப்படுவது பற்றி அவரிடம் நிருபர்கள் கேட்ட போது, "நான் குதிரை பேரம் நடத்த வரவில்லை'' என்றார். கர்நாடகத்தில் பாரதீய ஜனதா அரசு பிழைக்குமா? என்று கேட்டதற்கு; "இன்னும் 3 நாட்கள் பொறுத்திருந்து பாருங்கள்'' என்று பதில் அளித்தார்.
இதற்கிடையே, "கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் உங்கள் எம்.எல்.ஏ. பதவியை ஏன் பறிக்கக்கூடாது?'' என்பதற்கு 10ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கோரி, அதிருப்தி கோஷ்டியின் தலைவரான அமைச்சர் ரேணுகாச்சார்யா உள்ளிட்ட 11 பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு கர்நாடக சட்டசபை சபாநாயகர் போப்பையா நேற்று நோட்டீசு அனுப்பினார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் மைசூரில் நேற்று தசரா விழாவை தொடங்கி வைத்த பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் எடியூரப்பா, முன்னாள் பிரதமர் தேவேகவுடாவும், அவரது மகன் குமாரசாமியும் தனது அரசை கவிழ்க்க தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக குற்றம் சாட்டினார். என்றாலும் 11ஆம் தேதி சட்டசபையில் தன்னால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கிடையே சன்னபட்னா தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற ஜனதா தளம் (எஸ்) கட்சியின் உறுப்பினர் அஷ்வந்த் பாஜகவுக்கு ஆதரவாக மாறியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




