கர்நாடகா மாநிலத்தில் பாஜக அரசுக்கு எதிராக 16 எம்.எல்.ஏக்கள் திரும்பியதைத் தொடர்ந்து முதல்வர் எடியூரப்பா இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார். இன்று நடக்கும் வாக்கெடுப்பில் பாஜக அரசு கவிழும் என்ற நிலையிருக்கும் வேளையில், அதிருப்தி எம்.எல்.ஏக்களான 11 பாஜக மற்றும் 5 சுயேட்சை எம்.எல்.ஏக்களை கட்சி தாவல் சட்டத்தைக் காரணம் காட்டி தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் எடியூரப்பாவின் ஆட்சி கவிழும் ஆபத்து விலகியது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் தடை பெற முடிவு செய்துள்ளனர். இருப்பினும் இன்று நடக்கும் வாக்கெடுப்புக்கு முன்னர் தடை பெற வாய்ப்பில்லையாதலால், அவர்களால் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ள இயலாது.
16 எம்.எல்.ஏக்கள் நீக்கப்பட்ட நிலையில், தற்போது கர்நாடகா சட்டசபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 224ல் இருந்து 208 ஆக குறைந்துள்ளது. ஆட்சியைத் தக்க வைக்க 105 ஓட்டுகள் தேவையுள்ள நிலையில், எடியூரப்பாவிற்கு 105 க்கு மேற்பட்ட எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளதால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




