சென்னை, வேளச்சேரியில் வசித்து வருபவர் பத்திரிக்கையாளர் அமுதா தமிழ்நாடன். இவர் வாரமிருமுறை வெளிவரும் புலனாய்வு இதழில் துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று முந்தினம் சென்னை மாநகர ஆணையரை தனது வழக்கறிஞருடன் வந்து சந்தித்த அமுதா ஒரு முறையீட்டைச் செய்துள்ளார்.அதன்படி, அமுதா தமிழ்நாடன் எழுதிய "ஜூகிபா எனும் சிறுகதை, "இனிய உதயம் எனும் பத்திரிகையில் 1996ம் ஆண்டு ஏப்ரலில் பிரசிரிக்கப்பட்டுள்ளது. இதே கதை தொடர்ந்து 2007ம் ஆண்டில், சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் சார்பில் வெளிவந்த "திக் திக் தீபிகா" என்ற புத்தகத்திலும் இடம்பெற்றதாம்
அண்மையில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும், "எந்திரன் திரைப்படத்தை பார்த்த இவர் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் நேரிலும், போனிலும் மற்றும் கடிதம் மூலமும், இந்த படம்"ஜூகிபா" என்ற சிறுகதையை வைத்து அப்படியே எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனராம்.
இதை படத்தைப் பார்த்து உறுதி செய்துகொண்ட அமுதா தமிழ்நாடன் பின்னர் நிருபர்களிடம் கூறுகையில் " என், "ஜூகிபா கதையை மூலக்கதையாக வைத்து, மசாலாக்கள் பாட்டு, சண்டை, கிராபிக்ஸ் காட்சிகளைச் சேர்த்து, "எந்திரன் படத்தை எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்திய பத்திரிகை பதிவாளர் முன் பதியப்பட்ட, "இனிய உதயம் இதழில் வெளியான காப்புரிமை கொண்ட எனது, "ஜூகிபா கதையை படமாக்க, என்னிடமோ, இனிய உதயம் வெளியீட்டாளரிடமோ எந்த முன் அனுமதியும் பெறவில்லை. மோசடி செய்து, லாபம் சம்பாதிக்கும் உள்நோக்கத்துடன் இயக்குனர் சங்கர், 1997 - 98ல் தான் கற்பனை செய்தது போல் பொய்யாகக் கூறி, "எந்திரன் படத்தை உருவாக்கி, அவரே அதன் இயக்குனராக செயல்பட்டுள்ளார்.
இயக்குனரும், தயாரிப்பாளரும் சேர்ந்து கூட்டு சதி செய்து இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியிட்டு, என் காப்புரிமையை சட்டத்திற்கு விரோதமாக உரிமை மீறல் செய்துள்ளனர். இந்திய காப்புரிமை சட்டத்தின்படி, கிரிமினல் குற்றம் புரிந்துள்ள இயக்குனர், தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மாநகரக் காவல் ஆணையரிடம் தாம் புகார் அளித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (1)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




