திரையுலகுக்கும் ஒழுக்கத்திற்கும் சம்பந்தமேயில்லை என்று பாடலாசிரியர் வாலி குறிப்பிட்டுள்ளார்.
கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்த ஏ.எல்.எஸ்.வீரய்யா "சினிமாவும் நானும்" என்ற பெயரில் புத்தகம் எழுதியிருக்கிறார். இந்தப் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் திரைப்பட பாடலாசிரியர் வாலி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் திரைத்துறையைப் பற்றியும், திரைத்துறையில் இருப்பவர்கள் பற்றியும் வெளிப்படையான சில கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
வியர்வை சிந்தி உழைப்பவன்தான் சினிமாவில் வளர முடியும். காக்காய் பிடிப்பவன் வளர முடியாது. அதே நேரம், நான் பார்த்த, என் அனுபவத்தில் சொல்கிறேன், ஒழுக்கத்துக்குச் சம்பந்தமே இல்லாத துறை சினிமா. இதில் ஒழுக்கமாக இருப்பவர்கள் எஸ்.பி.முத்துராமன் போன்ற வெகுசிலர்தான். இன்னொன்று, சினிமாவில் வெற்றியை மண்டைக்குள் கொண்டு போகக் கூடாது. தோல்வியை மனசுக்குள் கொண்டு போகக் கூடாது. எவ்வளவு வளர்ச்சி வந்தாலும் மனிதன் மனிதனாகத்தான் இருக்க வேண்டும்.
திரையுலகைப் பொறுத்தவரை மழை விழுந்தாலும், மாடு சிறுநீர் கழித்தாலும் எந்த மாற்றமும் அடையாத பாறைபோல, கிட்டத்தட்ட சுரணை இல்லாமல் இருக்கவும் பழகிக் கொள்ள வேண்டும். இல்லேன்னா இருக்க முடியாது.
"கண்ணதாசன் 4 ஆயிரம் பாடல்தான் எழுதி இருக்கிறார். நீங்கள் (வாலி) 15 ஆயிரம் பாடல் எழுதி இருக்கிறீர்களே? "என்று என்னிடம் சிலர் கேட்கிறார்கள். கண்ணதாசன் 54 வயது வரைக்கும்தான் வாழ்ந்தார். எனக்கோ இப்போது 80. அவரும் இன்றுவரை உயிரோடு இருந்திருந்தால் 20 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் எழுதி இருப்பார்." என்றெல்லாம் வாலி பேசியுள்ள்ளார்.
வாலியின் இந்த தடாலடி கருத்து பற்றி நடிகர் சங்கம் என்ன கருதுகிறது என்பது இன்னமும் தெரிய வரவில்லை.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




