`எந்திரன்' திரைப்படத்தின் கதை தான் எழுதிய சிறுகதையில் இருந்து திருடப்பட்டதாக கூறி ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு எழுத்தாளர் தொடர்ந்த சிவில் வழக்கு தொடர்பாக, தயாரிப்பாளர் கலாநிதிமாறன், டைரக்டர் சங்கர் ஆகியோருக்கு அறிவிக்கை அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வாரப்பத்திரிகை ஒன்றில் பணியாற்றும் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்ற அமுதா தமிழ்நாடன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சிவில் வழக்கில் கூறியிருப்பதாவது:-
நான் சிறுவயதில் இருந்து கவிதைகள், கதைகள், நாவல்கள் எழுதி வருகிறேன். அமுதா தமிழ்நாடன் என்ற புனைப்பெயரில் நான் எழுதி வெளியான கதைகள், கவிதைகளுக்கு பாராட்டுகள், பரிசுகள் பெற்றுள்ளேன்.
அந்த வரிசையில் நான் எழுதிய `ஜுகிபா' என்ற சிறுகதை இனிய உதயம் என்ற இலக்கிய பத்திரிகையில் கடந்த 1996ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியானது. லட்சக்கணக்கான மக்கள் அதை படித்துள்ளனர். பின்னர் அதே கதை, 2007-ம் ஆண்டில் சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் சார்பில் `திக் திக் தீபிகா' என்ற புத்தகத்திலும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட எந்திரன் சினிமாவை பார்த்த எனது வாசகர்கள் மற்றும் நண்பர்கள் நேரிலும், கடிதம் மூலமாகவும் என்னை தொடர்பு கொண்டு பேசினர். எனது படைப்பான ஜுகிபா என்ற சிறுகதையை அப்படியே எந்திரன் படத்தில் எடுத்து உபயோகித்து இருக்கின்றனர் என்று தெரிவித்தனர்.
எனவே நானும் எந்திரன் படத்தை தியேட்டரில் பார்த்தேன். அதைப்பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தேன். எனது ஜுகிபா கதையை மூலக்கதையாக வைத்து, சினிமாத்தனமான பாட்டு, சண்டை, கிராபிக்ஸ் காட்சிகளை சேர்த்து எந்திரன் சினிமாவை உருவாக்கி இருப்பது தெரிய வந்தது.
பதிவு செய்யப்பட்ட பத்திரிகையில் வெளியானதை அடுத்து, நான் எழுதிய ஜுகிபா கதையின் பதிப்புரிமை எனக்கு சொந்தமானதாகும். ஆனால் என்னிடமோ, எனது கதையை வெளியிட்ட இனிய உதயம் பத்திரிகை வெளியீட்டாளரிடமோ அந்தக்கதையை பயன்படுத்த முன்அனுமதி பெறவில்லை.
1997-98ஆம் ஆண்டில் இந்தக்கதையை கற்பனை செய்ததாக கூறி எந்திரன் படத்தை உருவாக்கி இயக்கி இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனமும், அதன் நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறனும் `எந்திரன்' படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியிட்டு உள்ளனர்.
எனது கதையான ஜுகிபாவை திருடி எந்திரன் சினிமாவை எடுத்தது பதிப்புரிமை சட்டத்தின்படி தவறாகும். எனவே எனக்கு நஷ்டஈடாக ஒரு கோடி ரூபாய் கொடுப்பதற்கு உத்தரவிட வேண்டும். எந்திரன் சினிமாவை தியேட்டர்கள் மூலமாகவோ, வேறு மீடியாக்கள் வழியாகவோ திரையிட தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த வழக்கை நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் விசாரித்தார். இந்த வழக்கு தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்யும்படி கலாநிதிமாறன், சங்கர் ஆகியோருக்கு அறிவிக்கை அனுப்ப நீதிதபதி உத்தரவிட்டார். வழக்கின் விசாரணையை வருகிற 18ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




