முதலாம் உலகப்போரின் போது ரஷ்யாவின் போல்ஷ்விக் தலைவர் லெனினைக் கொலை செய்திட பிரிட்டன் திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் பல காலமாக ஒரு கற்பனை என்று புறக்கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதலாம் உலகப்போர் காலத்தில் ரஷ்யாவின் போல்ஷ்விக் தலைவராக இருந்த லெனினைக் கொலை செய்ய இங்கிலாந்து முயன்றதாக கூறப்பட்டது. இது ஒரு கற்பனை செய்தி என இதுவரை நம்பப்பட்டு வந்த நிலையில், அது உண்மைதான் என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள புதிய செய்தியில், 1918 ல் ஒரு ரஷிய பெண்மணி லெனினை இரு முறை துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தில் மாஸ்கோவிற்கான அப்போதைய லண்டன் பிரதிநிதி ராபர்ட் ப்ரூஸ் லாகர்ஹர்ட் சம்பந்தப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விஷயம் சோவியத் பள்ளிகளிலும், திரைப்படங்களிலும் காட்டப்பட்டிருந்தாலும் பிரிட்டன் இதனை மேற்கிற்கு எதிரான பிரச்சாரம் என்று கூறி மறுத்தே வந்துள்ளது.
லாகர்ஹர்ட்டும் இதனை மறுத்தே உள்ளார். ஆனால் 1918 வேனிர்காலங்களில் அனுப்பப்பட்ட தந்திகளில் லாகர்ஹர்ட் இந்தக் கொலை முயற்சிக்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி அப்போதைய பிரிட்டிஷ் போர் கவுன்சில் உறுப்பினரான கர்சன் பிரபுவிடம் விவாதித்துள்ளதாக டெய்லி மெயில் பத்திரிக்கை தெரிவிக்கிறது. லெனினின் இடத்தை போல்ஷேவிக்குகளில் எதிர் அணியினரில் ஒருவரான சவின்கோவைக் கொண்டு நிரப்புவது பற்றி அவர்கள் விவாதித்ததாக தெரிகிறது. அந்தச் செய்திக்குக் கீழே கர்சன் பிரபுவின் இனிஷியலை கொண்டு கையெழுத்திடப்பட்டுள்ளது.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு லாகர்ஹர்ட் ரஷிய ரகசிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். ஆனாலும் தன்னுடைய சுயவிபரகுறிப்பில் அது பிரிட்டனுக்கான பிரபல ரஷிய உளவாளி சிட்னி ரீலியின் வேலை என்றே பதிவு செய்துள்ளார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




