"லிபியா ஆட்சியாளர் கடாபியை கொல்லும் திட்டம் எதுவும் இல்லை; ஆட்சியை மாற்றும் திட்டம் தான் உள்ளது; அவருக்கு எதிரான போரில், நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம்” என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பார்லிமென்டில், லிபியா மீதான தாக்குதல் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள்சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கு அதிபர் ஒபாமா பதில் அளித்தார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், "லிபியாவின் வான் பகுதி, நேட்டோ நாடுகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. 1973ம் ஆண்டின் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி, லிபிய மக்களின் பாதுகாப்பும், கட்டுப்பாடும் நேட்டோ அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும். ராணுவத்தை பயன்படுத்தி, லிபியா ஆட்சியாளர் கடாபியை கொல்லும் திட்டம் எதுவும் இல்லை; ஆட்சியை மாற்றும் திட்டம் தான் உள்ளது' என, ஒபாமா தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், லிபியா நிலைமை குறித்து, வாஷிங்டனில் உள்ள தேசிய ராணுவ பல்கலைக் கழகத்தில், நாளை (திங்கள் கிழமை) அதிபர் ஒபாமா உரையாற்றுவார்' என, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, நேற்று ரேடியோ மூலம் நாட்டு மக்களுக்கு அளித்த பேட்டியில் அதிபர் ஒபாமா, "லிபியா ஆட்சியாளருக்கு எதிரான எங்களது போரில் நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம்.
பெங்காசியில் கடாபியின் படை பின்வாங்கி யுள்ளது. லிபியாவுக்குள் ராணுவப் படையை நாங்கள் பயன்படுத்தவில்லை. எங்களுடன் இணைந்து விமான தாக்குதலில், அரபு நாடுகளான கத்தார் மற்றும் யு.ஏ.ஈ., ஈடுபட்டுள்ளன. லிபியா மீதான தாக்குதல் பொறுப்பு, இந்த வார ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவிடம் இருந்து நேட்டோ அமைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது.
கடாபியின் கோடிக்கணக்கான சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. லிபியா மக்களின் பயன்பாட்டிற்கு இது உதவும். கடாபியின் படைகள் பின் வாங்கி, மனிதாபிமான உதவிகளுக்கு வழி விட வேண்டும்.
வன்முறையில் ஈடுபடு பவர்கள், அதற்கான பலனை அனுபவிப்பர். கடாபி ரத்தத்தில் குளிக்கப் போவதாக மிரட்டுகிறார். இது, அந்த மண்டலம் முழுவதையும் பாதிக்கும். இதை தடுக்க, சர்வதேச சமுதாயம் முன் வரும் போது நாங்களும் பங்கேற்க வேண்டும். அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டியது எங்களுடைய கடமை' என்றார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




