லிபியாவின் கடாஃபி அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக பதவி வகித்த மூசா கவுசா, டுனீஷியா வழியாக பிரிட்டனுக்குத் தப்பிச் சென்று, அங்கு அரசு ஆதரவில் வாழ்கிறார். கடாபியின் செயல்களால் அதிருப்தியடைந்து பதவி விலகியுள்ள அவரை வைத்து, அதிருப்தியாளர்களுக்கு உதவ பிரிட்டன் மற்றும் அமெரிக்க அரசுகள் திட்டமிட்டுள்ளன.
கடாபி அரசில் நீண்ட நாட்கள் பணியாற்றிய அவருக்கு, அந்நாட்டு அரசின் அனைத்து திட்டங்களும் தெரியும் என்பதால், பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டோர் தப்பி வந்த மூசாவிடம், பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். டுனீஷியா வழியாக இவர் தப்பி பிரிட்டனில் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. இவர் கடாபிக்கு வலது கரமாக இருந்தவர். புலனாய்வில் அதிக கெட்டிக்காரர் என்று கூறப்படுகிறது.
லிபியாவில் கடாபி ராணுவத்தின் நடவடிக்கைகளை, கண்காணிக்க அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ., அந்நாட்டு ராணுவத்தில் ஊடுருவியுள்ளது. லிபியாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் உள்ள, கடாபியைப் பதவி விலகும்படி கோரி அந்நாட்டு எதிர் கட்சியினர் போராடி வருகின்றனர். போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவளித்து வருகின்றன.
பதவி விலக மறுக்கும் கடாபி, போராட்டக்காரர்கள் மீது விமான தாக்குதல் நடத்தியதால் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாயினர். இதையடுத்து மேற்கத்திய நாடுகளின் படைகள் லிபியா மீது தாக்குதல் நடத்தின. கடாபிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கு, ஆயுத உதவி வழங்கவும் அமெரிக்கா முன்வந்துள்ளது.
அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ., தனது ஆட்களை லிபியா ராணுவத்துக்குள் ஊடுருவச் செய்து, ராணுவத்தின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வருகிறது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




