லிபியாவில் அதிபர் கடாஃபிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்கள் பெங்காசி, அஜ்தாபி, பிரகா, ரஸ்லனூப் உள்ளிட்ட நகரங்களை பிடித்து தங்கள் கைவசம் வைத்து இருந்தனர்.
அவற்றில் பெங்காசியை தவிர மற்ற நகரங்கள் மீண்டும் லிபியா இராணுவம் வசமாகியுள்ளன. இந்த நிலையில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படைகள் களம் இறங்கியுள்ளன.
கடாஃபியின் இராணுவ நிலைகளை குண்டுவீசி தாக்கி வருகின்றன. இந்த நிலையில், இறுதியாக ராணுவம் வசமாகியுள்ள எண்ணை வளம் மிக்க நகரமான பிரகாவின் அருகேயுள்ள அஜ்தாபியாவில் கடாஃபியின் இராணுவ நிலைகளின் மீது அமெரிக்க படைகள் நேற்று குண்டுகளையும், ராக்கெட்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தின.
அதில் ஒரு ராக்கெட் கிளர்ச்சியாளர்கள் மீது தவறுதலாக பாய்ந்து சென்று தாக்கியது. இதில், ஆம்புலன்சில் சென்று கொண்டிருந்த ஒரு சுகாதார ஊழியர் உயிரிழந்தார். அவர் தவிர ரோட்டில் நடந்து சென்ற மேலும் 4 பேர் பலியானார்கள். டாக்டர் உள்பட பலர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் அஜ்தா பியாவில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்க படை தாக்குதல் நடத்துவது இது 2-வது தடவையாகும். கடந்த வாரம் சனிக்கிழமை இதே பகுதியில் நடந்த ராக்கெட் குண்டு வீச்சில் சுமார் 13 கிளர்ச்சியாளர்கள் பலியானார்கள்.
தற்போதும் இது போன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் அமெரிக்க கூட்டு படைகள் மீது கிளர்ச்சியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நேற்று நடந்த தவறுதலான தாக்குதலுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டு படைகளின் கமாண்டர் கிளர்ச்சியாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




