
கனிமொழி செய்த குற்றம் நான் செய்த குற்றம்? என்று கருணாநிதி கூறியுள்ளாரே... இதை ஒப்புதல் வாக்குமூலமாக எடுத்துக் கொண்டு கருணாநிதியை ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்க முடியுமா? - ஆடுதுறை சுந்தர்.
கருணாநிதி சொன்னது, கனிமொழியைக் கலைஞர் டி வி யில் பங்காளியாகச் சொன்ன தம் குற்றம் பற்றியே! கலைஞர் டி வி யில் அறுபது விழுக்காடு பங்குகளை வைத்திருக்கும் தயாளு பற்றித் துணைக்குற்றப்பத்திரிகையில் கூறியிருந்தும் இன்னும் அவர் மீதே நடவடிக்கை இல்லையாம்; வெறுமனே மேடை அலங்காரத்துக்காகக் கருணாநிதி சொன்ன சொல்லை வைத்து எப்படிக் குற்றவாளியாக்க முடியும்?
கனிமொழி மீது ஸி பி ஐயின் குற்றச்சாட்டு கலைஞர் டி வி யில் பங்காளியாக இருப்பது இல்லை. ஸாஹித் உஸ்மான் பல்வாவுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில் 214 கோடியை லஞ்சமாகப் பெற்றது என்பதுதான்.
யோகா பாபாவுக்கு குரல் கொடுக்கும் பாரதிய ஜனதா கட்சி இதன்மூலம் வலுவடையுமா? அல்லது வழக்கம்போல் ஏமாறுமா? - கராத்தே அலி, கோவை.
யோகா பாபா கவிழ்ந்தாச்சு. அதனால் பா ஜ க வுக்கு ஏமாற்றமே.
நிர்பந்தம் ஒருபுறம் இருக்கட்டும்; காரியம் ஆனால் போதும் என்று லஞ்சம் கொடுத்து தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் பொதுமக்கள் மட்டும் குற்றவாளி இல்லையா? - திருஞானம், சென்னை.
சட்டப்படி லஞ்சம் கொடுப்பதும் குற்றமே. எனவே உங்கள் வினா சரிதான்.
வணங்காமுடி விடைப்பகுதியில் இதைப் பற்றிக் கூறியுள்ளேன். மிக அண்மையில் 5 ஆம் தேதி அளித்துள்ள விடையிலும் குறிப்பிட்டுள்ளேன்.
காதலிப்பது, காதலிக்கப்படுவது எதில் சார் சுகம் அதிகம்? - ஜமால், துபை.
தான் காதலிக்கும் மனைவியால் காதலிக்கப்படுவதில் உள்ள சுகமே சுகம்.
சஊதி அரேபியாவில் பணியாற்றும் இந்தியர்கள் இனிமேல் 6 ஆண்டுகளுக்குமேல் அங்கே தங்க முடியாதாமே, உண்மையா? - ப.கோ. வசீகரன்.
அந்நாட்டுத் தொழில் அமைச்சர் சொன்னதை முழுமையாக விளங்காமல் நமது ஊடகங்கள் வெளியிட்ட செய்தித் தலைப்பு இது.
பாபா ராம்தேவ் மத்திய அரசின் கையாளா? ஆர்.எஸ்.எஸ்-ன் ஏஜெண்டா? - உமர், பட்டுக்கோட்டை.
இதுவரை ஊடகங்களில் வெளியான தகவல்களை வைத்துப் பார்த்தால், பாபா ராம்தேவ், ஆர் எஸ் எஸ் ஆதரவாளர் என்பது தெரியாமல் காங்கிரஸால் ஏற்பாடு செய்யப்பட்டுக் களமிறக்கப்பட்டவர் எனப்புரிகிறது.
சீனாவில் தியான்மென் படுகொலைகள் நடக்கவே இல்லையாமே? அப்படியென்றால் நாம் எதைத்தான் செய்தியாக படித்துக்கொண்டுள்ளோம்? - மீரான், நெய்வேலி. 
உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கத் தூதர்கள் தங்கள் நாட்டு அரசுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் உளவுச் செய்திகளும் அவற்றைக் கசியவிடுவதாகக் கூறும் விக்கிலீக்சும் முழுமையாகத் நம்பத்தக்கவையா என ஐயம் ஏற்படுகிறது.
ஒவ்வொரு நாடும் தங்களுக்குத் தேவையான பணத்தை அச்சடித்துக் கொண்டால் வறுமை / ஏழ்மை என்பதை ஒழிந்து விடலாம் அல்லவா?- பாபு, திருவிடைமருதூர்.
இப்போதும் அப்படித்தானே நாடுகள் தங்களுக்குத் தேவையான பணத்தை அச்சடித்துக் கொள்கின்றன. அதில் என்ன மயக்கம்?ஆனால் கணக்கு வழக்கின்றி அப்படிச் செய்யும்போது, பணப்புழக்கம் கட்டுமீறிப் போகும். அதனால் பணவீக்கம் உருவாகி விலைவாசிகள் வானைத் தொடும். சாதாரண ஏழைகளுக்கு உணவுகூட எட்டாக்கனியாகிவிடும். பை நிறையப் பணம் கொண்டுபோய்க் கை நிறையப் பொருள் வாங்கும் நிலை வரும்.
மிக சிக்கனமாக நடந்த 'இலவச அரிசி' வழங்கும் விழா. ஜெயலலிதாவின் இந்த 'அடக்கி வாசிப்பு' நாடாளுமன்ற தேர்தல் வரையிலுமா அல்லது ஐந்து ஆண்டுகளுக்கும் தொடருமா....? - ஆண்றோ ஜெயரெஸ்ட், கனடா.
அடக்கி வாசிப்பாகத் தெரியவில்லை; ஏதோ சோதிட நிபுணரின் உபதேசம் போல்தான் தெரிகிறது. அடக்கி வாசிப்பு என்றால் சமச்சீர்கல்விக்கு எதிராக உச்சநீதிமன்றம் போவாரா?
ஆர். எஸ். எஸ். என்றாலே காங்கிரஸ் ஏன் இப்படி பம்முகிறது? - சுதிர், கோட்டைபட்டினம்.
இல்லையே? எதை வைத்து அப்படிச் சொல்கிறீர்கள்?
ஆர் எஸ் எஸ் ஆதரிக்கும் யோகா மாஸ்டர் ராம்தேவின் உண்ணாவிரத நாடகத்தில் காங்கிரஸ் அச்சப்பட்டு விட்டது என நீங்கள் நினைப்பதாலா? உங்கள் கற்பனையாகக் கூட இருக்கலாம்.
நம்ம நாட்டு காதலுக்கும் மற்ற வெளி நாட்டு காதலுக்கும் வேறுபாடு இருக்கிறதா? இருப்பின் அது என்னென்ன? - சுரேஷ் குமார், கொமாரபாளையம்.
நம் நாட்டில் காதல் தோல்வியால் தற்கொலை அல்லது கொலை நிகழும்; தாடி வளர்த்துக் கொண்டு திரிவர்; குடிப்பர்.
வெளிநாட்டில் ஒன்று போனால் மற்றொன்று என இருப்பர்.
(வணங்காமுடி பதில்கள் அனைத்தையும் இங்கு காணலாம்)
| வணங்காமுடிக்குக் கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம். |

| < முந்தையது | அடுத்தது > |
|---|




