சென்னை: முன்னாள் விமானப்படை வீரர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அடையாறு வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் ஓய்வு பெற்ற விமானப்படை ஊழியர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் தனது மனைவியோடு சென்னை நகர காவல் ஆணையர் அலுவலத்திற்கு வந்து, புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில் அவர் தனது குடும்பத்தோடு காரில் வரும்போது மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் தன்னையும், தனது மனைவியையும் தாக்கியதாகவும், அவருக்கு ஆதரவாகவும் சிலர் வந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக சாஸ்திரிநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த விசாரணையில் சந்திரசேகரை தாக்கியவர் சிவக்கொழுந்து (35) என்பதும் அவர் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிகிறார் என்பதும் தெரியவந்துள்ளது. அவருக்கு ஆதரவாக வந்து தாக்குதலில் ஈடுபட்டது அவரது தந்தை சங்கர் என்று கண்டறியப்பட்டது. சங்கர் சாஸ்திரிநகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார் என்பது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து இவர்கள் இருவர் மீதும் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒழுங்கு நடவடிக்கையாக பணியில் இருந்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். வேலை நீக்கம் செய்யப்பட்ட சிவக்கொழுந்துவும், சாஸ்திரிநகர் பதிலுக்கு சாஸ்திரிநகர் காவல்நிலையத்தில் சந்திரசேகர் மீது புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் தானும், தனது 8 மாத கர்ப்பிணி மனைவியும் மோட்டார் சைக்கிளில் வந்தபோது பின்னால் காரில் வந்த சந்திரசேகர் காரில் சப்தம் எழுப்பி எரிச்சலூட்டியதாகவும் அதை தட்டி கேட்டதால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது என்றும், சந்திரசேகரும் பதிலுக்கு தன்னை தாக்கியதாக குறிப்பிட்டு இருந்தார். இந்த புகார் மனு அடிப்படையில் சந்திரசேகர் மீதும் சாஸ்திரிநகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




