"நீதிக்கான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் போராட்டத்திற்கு மதிமுக தன் ஆதரவை வழங்கும்" என பிஎஃப்ஐ சார்பாக டெல்லியில் நடக்க இருக்கும் சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சார துவக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.
வருகின்ற நவம்பர் மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் புதுடெல்லியிலுள்ள ராம்லீலா மைதானத்தில் "தேசத்தை நீதியால் கட்டமைப்போம்" என்ற முழக்கத்தோடு "சமூக நீதி மாநாடு(SOCIAL JUSTICE CONFERENCE)" நடக்க இருக்கின்றது. இந்த மாநாட்டின் முக்கியத்துவத்தையும் அதன் செய்தியையும் இந்தியா முழுவதும் கொண்டு செல்லும் நோக்கில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இதன் பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது.
தமிழகத்திலும் இதன் பிரச்சாரத்தை நேற்று முதல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கியது. திருவல்லிக்கேணி பகுதி ஐஸ்ஹவுஸ் ஷேக் தாவூது தெருவில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில செயலாளர் ஷேக் முஹம்மது அன்சாரி துவக்க உரை நிகழ்த்தினார். தலைமை தாங்கி உரை நிகழ்த்திய மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் கூறும்போது,
இன்றைய தினத்தில் பிற்ப்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்திற்கு எதிராக நடக்கும் அநீதிகளைப் புள்ளிவிபரங்களோடு எடுத்துக்கூறினார். "அனைத்து மக்களுக்கும் சம நீதி என்ற இந்திய அரசியல் அமைப்பு சாசன சட்டத்தின் விதிமுறைகள் வெறும் ஏட்டளவில் தான் இருக்கிறது. சிறுபான்மை மக்களின் நிலையை அறிந்து கொள்ள மத்திய அரசு எண்ணற்ற கமிஷன்களை ஏற்படுத்தியிருந்தும் அந்தந்த கமிஷன்கள் தங்களது அறிக்கையைச் சமர்பித்த பின்பும் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததுகூட நீதி மறுக்கப்படுவதற்கான ஒரு செயலேயாகும்" என்று அவர் மேலும் கூறினார்.
பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொருளாளர் வழக்கறிஞர் கே.பி.ஷரீஃப் சிறப்புரையாற்றும்போது, இந்திய அரசியல்வாதிகளால் மக்கள் எந்தளவிற்குச் சிரமப்படுகிறார்கள் என்பதை எடுத்துக்கூறினார். "பெரும்பாலும் அரசியல்வாதிகளின் தலையீட்டினால்தான் சிறுபான்மை மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதி மறுக்கப்படுகிறது" என அவர் மேலும் கூறினார்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதிமுக -வின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் உரை நிகழ்த்தும் போது, வரலாறுகளில் முஸ்லிம்களின் தியாகத்தைப் பற்றி எடுத்துக் கூறியவர், "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தற்போது நீதிக்கான போராட்டத்தை துவக்கியுள்ளது. இதற்காக அவர்கள் நிறைய தியாகங்களைச் செய்ய தயாராக இருக்க வேண்டும். அதற்கு மதிமுக எப்போதும் ஆதரவு அளிக்கும்" என்று கூறினார்.
ஜமிய்யத்துல் உலமாயே ஹிந்தின் பொதுச்செயலாளர் மன்சூர் காஷிஃபி உரை நிகழ்த்தும் போது, "நாடாளுமன்றத் தாக்குதலில் குற்றம் சுமத்தப்பட்ட அஃப்சல் குருவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பும், கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அன்று வழங்கப்பட்ட பாபரி மஸ்ஜித் தீர்ப்பும் முஸ்லிம் சமூகத்திற்கு நீதி மறுக்கப்பட்டு வருவதற்குச் சாட்சியாகும்" என்று குறிப்பிட்டார்.
இறுதியாக எஸ்.டி.பி.ஐயின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது உரை நிகழ்த்தும் போது, "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த 2007ஆம் ஆண்டு பெங்களூரில் வலிமையான இந்தியாவை உருவாக்க மாநாட்டை நடத்தியது. அதன் விளைவாக இன்று வட இந்தியாவில் பாப்புலர் ஃப்ரண்ட் வேகமாக கால்பதித்து வருகிறது. அதன் பின்னர் 2009ஆம் ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 'தேசிய அரசியல் மாநாட்டை' நடத்தியது. இதன் விளைவாக இன்று சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) என்னும் அரசியல் பேரியக்கம் உருவாக அடித்தளமாயிருந்தது. தற்போது 'தேசத்தை நீதியால் கட்டமைப்போம்' என்ற முழக்கத்தோடு தலை நகரமாம் புது டெல்லியில் நடக்க இருக்கும் மாநாடு ஒரு வரலாற்று திருப்புமுனையாக திகழும்" என்று கூறினார்.
கூட்டத்தில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாடு திட்டத்தின் கீழ் ஏழை எளிய மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. சென்னயில் நல்ல மதிப்பெண் பெற்று கல்வியைத் தொடர முடியாத ஏழை மாணவர்களுக்கு மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் உதவித்தொகையினை வழங்கினார். இறுதியாக சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது நாஜிம் நன்றியுரையுடன் பொதுக்கூட்டம் நிறைவுற்றது. இப்பொதுக் கூட்டத்தில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




